234 தொகுதிகளில் உதயநிதி ஸ்டாலின் எங்கு போட்டியிட்டாலும் வெற்றிதான்... சொல்வது டி.ஆர் பாலு
தமிழகத்தின் எந்த தொகுதியிலும் போட்டியிட்டாலும் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெறுவார் என்று டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
திருவாரூர்: தமிழகத்தின் எந்த தொகுதியிலும் போட்டியிட்டாலும் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெறுவார் என்று திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். அதிமுக ஒரு கட்சியே இல்லை, சட்டசபைத் தேர்தலுக்கு பிறகு அதிமுகவே இருக்காது என்றும் கூறியுள்ளார் டி.ஆர் பாலு.
திமுக பொருளாளராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக இன்று திருவாரூர் வந்த டி.ஆர்.பாலு காட்டூரில் உள்ள கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மாஜி அமைச்சர் 'டிஸ்மிஸ்' மணிகண்டன் திடீரென ஓபிஎஸ்- உடன் சந்திப்பு
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர் பாலு சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் தேமுதிக, பாமக கட்சிகள் சேருமா என்று கேட்கிறிர்கள். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதை முடிவு செய்வார். இருப்பினும் தற்போதுள்ள கட்சிகளை விட கூடுதல் கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது என்றார்.
உதயநிதி ஸ்டாலின் முக்கிய பொறுப்பில் இருப்பதால் அவர், சேப்பாக்கம் தொகுதியில் மட்டுமல்ல, தமிழகத்தின் எந்த தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெறுவார் என்று கூறினார் டி ஆர் பாலு.
நீட் விவகாரத்தில் தமிழக அரசுக்கு இப்போது தான் ஞானோதயம் வந்திருக்கிறது என்றும் தேர்தல் வருவதால் மக்கள் மீது கரிசனம் இருப்பது போல காட்டிக் கொள்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டினார்.
மத்திய அரசின் வேளாண் சார்ந்த திட்டங்களை அதிமுக அரசு ஆதரிப்பதன் காரணமாக வரும் தேர்தலில் விவசாயிகள், பொதுமக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று கூறிய டி.ஆர் பாலுவிடம் அதிமுகவில் இரட்டை தலைமை பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், அதற்கு பதில் அளித்த அவர், அதிமுக ஒரு கட்சியே இல்லை, சட்டசபைத் தேர்தலுக்கு பிறகு அதிமுகவே இருக்காது என்றும் கூறினார்.