திருப்பதி அருகே சிறுமி கொலை வழக்கில் திடீர் திருப்பம்! கொலையாளி தற்கொலையால் பரபரப்பு
திருப்பதி: திருப்பதி அருகே மதனபள்ளியை அடுத்த ஒரு கிராமத்தில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதில் முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்பட்ட 27 வயது குலவர்தன் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் உறுதி செய்துள்ளனர்.
கடந்த திங்கள்கிழமை (பிப்ரவரி 16) மாலை 4 மணியளவில் வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி திடீரென காணாமல் போனார். குடும்பத்தினர் தேடியபோது, செவ்வாய்கிழமை காலை அக்கம் பக்கத்தில் வசித்த குலவர்தன் வீட்டில் உள்ள பெரிய தண்ணீர் டிரம்மில் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இதையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீஸார், சம்பவத்தினத்தன்று குலவர்தன், அந்த சிறுமியை அழைத்துச் சென்றதை உறுதி செய்தனர். அவர் பவர் லூம் தொழிலாளியாக பணியாற்றி வந்தவர். விசாரணையில், சிறுமியை வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்ததாக தெரிய வந்தது.
சிறுமியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் சிறுமியை நீரில் மூழ்கடித்து கொன்றது உறுதியானது. POCSO சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் போலீஸார் தேடுவதை அறிந்த குலவர்தன் தப்பி ஓடினார். ஆனால், புதன்கிழமை (பிப்ரவரி 18) அதிகாலை குரபலகோட்டா மண்டலம், கனசனிவரிபள்ளி ஊருக்கு அருகிலுள்ள ஏரியில் அவரது உடல் மிதப்பதாக உள்ளூர் மக்கள் கண்டு போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
உடலை மீட்டு மதனபள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மாவட்ட எஸ்பி தீரஜ் கனுபில்லி மற்றும் கர்னூல் ரேஞ்ச் டிஐஜி கோயா பிரவீன் ஆகியோர் தெரிவித்ததாவது: ஆரம்ப கட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கையின்படி, குலவர்தன் தண்ணீரில் மூழ்கி தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. முழு விசாரணை நடைபெற்று வருகிறது.
உறவினர்கள் உடலை அடையாளம் காண வரவழைக்கப்பட்டுள்ளனர். குற்றவாளி இறந்த செய்தி பரவியதும், பலர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். சில இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குலவர்தன் போதை மற்றும் மது பழக்கம் கொண்டவர் என சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications