குளிக்க சென்ற விஜயலட்சுமி.. பாய்ந்து தாக்கிய கரடி.. திருப்பதி மலையில் பரபரப்பு!
இளம்பெண் மீது கரடி பாய்ந்து தாக்குதல் நடத்தியதில் படுகாயமடைந்தார்
Recommended Video
திருப்பதி: குளிக்க சென்ற விஜயலட்சுமியை, மறைந்திருந்த கரடி ஒன்று திடீரென பாய்ந்து தாக்கிய சம்பவம் திருப்பதியையே அதிர வைத்துள்ளது.
திருப்பதி மலையில் உள்ள கோகர்பம் அணை அருகே ஏராளமான மடங்கள் இருக்கின்றன. சாமி கும்பிட வரும் பக்தர்கள் இந்த மடங்களில் தங்குவது வழக்கம். இந்த மடங்களுக்கு பின்புறம் அடர்ந்த காட்டுப்பகுதி ஒன்றும் உள்ளது.

இந்நிலையில், ஐதராபாத், நாகர்கரூரை சேர்ந்த விஜயலட்சுமி என்ற இளம்பெண் வீட்டில் சண்டை போட்டுக் கொண்டு வெளியே வந்துவிட்டார். எங்கே போவது என்று தெரியாமல், திருப்பதி மலைக்கு வந்துள்ளார்.
அங்குள்ள அணையில் குளிக்கலாம் என்று ஆசைப்பட்ட விஜயலட்சுமி அருகில் சென்றார். அப்போது அந்த பகுதியில் மறைந்திருந்த கரடி ஒன்று திடீரென விஜயலட்சுமி மீது பாய்ந்து தாக்கியது. இதனால் விஜயலட்சுமி அதிர்ச்சி அடைந்து கதறினார்.
இவரது சத்தம் கேட்டு மடங்களில் இருந்தவர்கள் ஓடிச்சென்று விஜயலட்சுமியை காப்பாற்ற முயன்றனர். மக்கள் கூட்டத்தை பார்த்ததும், கரடி அங்கிருந்து தப்பித்து காட்டுக்குள் ஓடிவிட்டது. கரடி தாக்குதலில் விஜயலட்சுமி பலத்த காயம் அடைந்தார். இதனால் உடனடியாக மீட்கப்பட்டு திருமலையில் உள்ள அஸ்வினி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்த இணை செயல் அலுவலர் தர்மா ரெட்டி மருத்துவமனைக்கு சென்று கரடி தாக்கியதால் காயம் அடைந்த விஜயலட்சுமியை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், அவருக்கு தரமான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications