முறைகேடு: திருப்பதி தேவஸ்தான அதிகாரி 'ஜெகன் ஆதரவு' தர்மா ரெட்டி வெளிநாடு தப்ப முயற்சியா? ஜனசேனா பகீர்
திருப்பதி: ஒடிஷாவில் பூரி ஜெகந்நாதர் கோவில் விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருப்பது போல ஆந்திராவில் திருப்பதி ஏழுமையான் கோவில் நிர்வாக முறைகேடுகள் பெரும் புயலைக் கிளப்பிக் கொண்டிருக்கின்றன.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் செயல் அதிகாரியாக இருப்பவர் தர்மா ரெட்டி. பொதுவாக திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரியாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுவர். ஆனால் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் ஐடிஎப்எஸ் அதிகாரியான தர்மா ரெட்டி, திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு பணி நீட்டிப்பும் வழங்கப்பட்டது.

ஆந்திரா அரசியலில் தர்மா ரெட்டியின் நியமனம், பணி நீட்டிப்பு ஆகியவை சர்ச்சையாக வெடித்தன. தேர்தலின் போது தர்மா ரெட்டிக்கு எதிராக இந்திய தேர்தல் ஆணையத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் புகாரும் கொடுத்திருந்தன.
இந்த நிலையில் ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பதை உணர்ந்த தர்மா ரெட்டி தம்மை பதவியில் இருந்து விடுவிக்குமாறு மாநில அரசிடம் விண்ணப்பித்திருந்தார். ஆனால் ஆந்திரா தலைமை செயலாளர் இதை ஏற்காமல், 15 நாட்கள் விடுப்பில் செல்லுங்கள் என்று மட்டும் கூறியிருந்தார்.
தர்மா ரெட்டியின் இந்த முடிவும் அவர் விடுப்பில் செல்லும் விவகாரமும் ஆந்திராவில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்தன. பவன் கல்யாணின் ஜனசேனா நிர்வாகிகள் திருப்பதி போலீசில் புகார் ஒன்றை கொடுத்தனர். அதில், விடுப்பில் செல்லும் தர்மா ரெட்டி திருப்பதி தேவஸ்தானத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டவர். பல நூறு கோடி முறைகேடுகளில் ஈடுபட்ட தர்மா ரெட்டி வெளிநாட்டுக்கு தப்பி ஓட வாய்ப்பிருக்கிறது. ஆகையால் தர்மா ரெட்டி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கின்றனர்.
இதனிடையே ஆந்திரா முதல்வராகப் பொறுப்பேற்று கோப்புகளில் கையெழுத்திடுவதற்கு முன்னதாக சந்திரபாபு நாயுடு நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்தார். பொதுவாக திருப்பதி கோவிலுக்கு வரும் தலைவர்களை தேவஸ்தானத்தின் நிர்வாக செயல் அதிகாரிதான் வரவேற்பது வழக்கம். அந்த வகையில் தர்மா ரெட்டிதான் சந்திரபாபு நாயுடுவை வரவேற்றிருக்க வேண்டும். ஆனால் தர்மா ரெட்டி விடுப்பில் சென்றதால் அவருக்கு பதில் பொறுப்பு அதிகாரிதான் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை வரவேற்றார்.
இந்த நிலையில் திருப்பதியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு, வேறு எங்காவது தவறு செய்தால் நிச்சயம் தண்டனை கிடைக்கும். திருப்பதியிலேயே முறைகேடு செய்தால் எந்த ஜென்மத்துக்கும் தண்டனையே கிடையாது என காட்டமாக கூறியிருந்தார். இந்த பதிலே, தர்மா ரெட்டியை குறித்துதான் எனவும் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் சர்ச்சைக்குரிய ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டியின் மகளைத்தான் தர்மா ரெட்டியின் மகனுக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் நிச்சயித்திருந்தனர். திருமணத்துக்கு சில நாட்களுக்கு முன்னர் தர்மா ரெட்டி மகன் மாரடைப்பால் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications