திருப்பதி உயிரியல் பூங்காவில் ஷாக்.. சிங்கம் கடித்து குதறியதில் இளைஞர் பலி.. ‛செல்பி’யால் போன உயிர்
திருப்பதி: ஆந்திர மாநிலம் திருப்பதி உயிரியல் பூங்காவில் தடுப்புகளை தாண்டி ஏறி குதித்து சிங்கத்துடன் ‛செல்பி' எடுக்க முயன்ற இளைஞர் பலியானார். சிங்கம் அவரது கழுத்தை கடித்து குதறியதால் துடிதுடித்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் ஸ்ரீவெங்கடேஸ்வரா உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் ஏராளமான வனவிலங்குகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் டிக்கெட் எடுத்து உயிரியல் பூங்காவுக்குள் சென்று வனவிலங்குகளை நேரில் பார்த்து ரசிக்கலாம்.

இந்த பூங்காவில் வழக்கம்போல் இன்றும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் டிக்கெட் எடுத்து வனவிலங்குகளை பார்வையிட்டு வந்தனர்.
இந்த உயிரியல் பூங்காவில் ஒரு பெண் சிங்கம், 2 ஆண் சிங்கங்கள் என மொத்தம் 3 சிங்கங்கள் உள்ளன. இந்நிலையில் தான் சிங்கங்கள் அடைக்கப்பட்டுள்ள இடத்தில் தடுப்புகளை தாண்டி ஏறி குதித்து இளைஞர் ஒருவர் உள்ளே குதித்தார். இதை அங்கிருந்த ஊழியர் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இதற்கிடையே தான் அந்த நபர் சிங்கத்தின் அருகே சென்று ‛செல்பி' எடுக்க முயன்றார். இந்த வேளையில் துங்கார்பூர் என்ற பெயர் கொண்ட ஆண் சிங்கம் அவரது கழுத்தை ஆக்ரோஷமாக கடித்தது. இதனால் அவர் அலறினார். இதை பார்த்த ஊழியர் மற்றும் சக பார்வையாளர்கள் கூச்சலிட்டனர். ஆனால் சிங்கம் அவரை விடவில்லை. மேலும் அந்த நபரின் சட்டையை கிழித்தது.
சிங்கத்திடம் இருந்து தப்பித்து மரத்தில் ஏற அந்த நபர் முயன்றார். ஆனால் சிங்கத்தின் பிடியில் இருந்து அவரால் விடுபட முடியவில்லை. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதையடுத்து வனஊழியர்கள், உயிரியல் பூங்கா ஊழியர்கள், போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.
மேலும் சிங்கம் தாக்கி இறந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். விசாரணையில் திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவில் சிங்கம் தாக்கி பலியான நபர் ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம் பன்சூர் பகுதியை சேர்ந்த பிரகலாத் குஜ்ஜார் என்பதும், அவருக்கு வயது 34 என்பதும் தெரியவந்தது. தனியாக உயிரியல் பூங்காவுக்கு வந்த அவர் சிங்கத்தின் அருகே சென்று ‛செல்பி' எடுக்க முயன்று பலியானது தெரியவந்துள்ளது.
இதற்கிடையே தான் சிங்கத்தின் அருகே சென்று ‛செல்பி' எடுக்க முயன்ற பிரகலாத் குஜ்ஜார் மனநலம் பாதிக்கப்பட்டவராக அல்லது மதுபோதையில் இருந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் இதனை போலீசார் உறுதி செய்யவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே அதனை உறுதி செய்ய முடியும் என போலீசார் தெரிவித்துவிட்டனர். இந்த சம்பவம் இன்று திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications