இதுதான் திருப்பதி கோவில்! பக்தர்கள் கூட்டமும் குறையவில்லை, லட்டு விற்பனை அமோகம்.. இன்ஸ்டா ரீல் ரீலு!
திருப்பதி: மாட்டுக்கொழுப்பு லட்டு விவகாரம் காரணமாக திருப்பதியில் கூட்டம் குறைந்துள்ளது என்றும் அங்கே மக்கள் கூட்டம் வெகுவாக குறைந்த நிலையில் வரிசையில் நிற்கவே ஆட்கள் இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது என்றும் இன்ஸ்டா ரீல்ஸ் மூலம் வதந்தி பரப்பப்படுகிறது. ஆனால் புள்ளி விவரம் வேறு மாதிரி உள்ளது.
இன்ஸ்டாகிராமில் இது தொடர்பாக ரீல்ஸ் ஒன்றும் வெளியாகி உள்ளது. அதில் அங்கே மக்கள் கூட்டம் இல்லாதது தொடர்பாக காட்சிகள் இடம்பெற்றுள்ளன. வரிசையில் நிற்க கூட ஆட்கள் இல்லாத அளவிற்கு மோசமான நிலை அங்கே ஏற்பட்டுள்ளதாக காட்சிகளில் கூறப்படுகின்றன. ஆனால் எப்போதும் போல லட்டு வாங்க மட்டும் கொஞ்சம் கூட்டம் உள்ளது என்று அதில் விளக்கப்பட்டு உள்ளது.

இந்த விவகாரம் காரணமாக மக்கள் கூட்டம் குறைந்ததால் திருப்பதி சுத்தமாகி உள்ளது என்றும் இதில் கூறப்பட்டு உள்ளது. திருப்பதியில் மாட்டுகொழுப்பு லட்டு பயன்படுத்தப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுக்க இந்துக்கள் இடையே அதிர்ச்சியை, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் பலரும் இந்த சம்பவம் காரணமாக கொதித்து போய் உள்ளனர்.
இதை அடுத்து, பக்தர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் வகையில் அங்கே சாந்தி யாகம் நடத்த திட்டமிடப்பட்டது. நேற்று காலை 6 மணி முதல் 10 மணி வரை 'சாந்தி யாகம்' கோயிலில் நடத்தப்பட்டது.
இன்ஸ்டா ரீல்ஸ் என்னதான் இப்படிச் சொன்னாலும், லட்டு விற்பனை புள்ளி விவரத்தை வைத்து பார்த்தால், தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கையில் பாதிப்பு இல்லை என்றுதான் தெரிகிறது. நான்கு நாட்களில் 14 லட்சத்திற்கும் மேற்பட்ட திருப்பதி லட்டுகள் விற்பனையாகியுள்ளன. செப்டம்பர் 19 அன்று மொத்தம் 3.59 லட்சம் லட்டுகள், செப்டம்பர் 20 அன்று 3.17 லட்சம், செப்டம்பர் 21 அன்று 3.67 லட்சம் மற்றும் செப்டம்பர் 22 அன்று 3.60 லட்சம் லட்டுகள் விற்பனையாகியுள்ளன. எப்போதுமே தினசரி சராசரியான 3.50 லட்சம் லட்டுகள் விற்பனையாகும். எனவே இப்போதும் எந்த குறையும் இன்றி பக்தர்கள் லட்டுகளை வாங்கிச் செல்கிறார்கள் என்பது உறுதியாகியுள்ளது.
மாட்டுக்கொழுப்பு சர்ச்சை: திருப்பதி லட்டு தொடர்பாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு வைத்த புகார் தற்போது உண்மையாகி உள்ளது. லட்டுவில் செய்யப்பட்ட சோதனைகள் மாட்டுக் கொழுப்பு தொடர்பான அதிர்ச்சி அளிக்கும் முடிவுகளை வெளியிட்டு உள்ளன.
ஜெகன்மோகன் ஆட்சியில் திருப்பதியில் லட்டு தயாரிக்க விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட நெய் பயன்படுத்தப்பட்டதாக பகீர் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது. ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இந்த குற்றச்சாட்டை வைத்துள்ளார். முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை கிடைத்தே தீரும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
புகார் என்ன?: 2019 முதல் 2024 வரையிலான ஒய்.எஸ்.ஆர்.சி.பி ஆட்சியில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. உலகம் முழுக்க மக்களால் மிகவும் மதிக்கப்படும் திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிக்க விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தி உள்ளனர். திருமலையில் உள்ள வெங்கடேஸ்வர ஸ்வாமி கோவில் நமது மிகவும் புனிதமான கோவில்.
ஜெகன் நிர்வாகம் திருப்பதி பிரசாதத்தில் நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். கோடிக்கணக்கான பக்தர்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத ஜெகன் மற்றும் ஒய்எஸ்ஆர்சிபி அரசை பார்த்து வெட்கப்படுகிறேன் என்று சந்திர பாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
ரிசல்ட் சொல்வது என்ன?: இதற்காக அப்போது தயாரிக்கப்பட்ட லட்டுகள் மீதான சோதனை முடிவுகள் வெளியாகி உள்ளன. மொத்தம் 5 சாம்பிள் எடுத்துள்ளனர். இதன் கொழுப்பு மதிப்பு எஸ் மதிப்பு என்ற பெயரில் வெளியாகி உள்ளது 5 சாம்பிள் மதிப்புகள் முறையே, 86.62 , 106.89, 22.43, 117.42, 19.72 ஆகும்.
இந்த 5 மதிப்புகளில் 2 மற்றும் 3வது சாம்பிள்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட எஸ் மதிப்பு கூடுதலாக உள்ளது. மற்றவர்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட எஸ் மதிப்பு குறைவாக உள்ளது. இப்படி குறைவாகவோ, கூடுதலாகவோ இருந்தால்.. அதில் வேறு ஒரு கொழுப்பு உள்ளது என்று அர்த்தம்.
இதில் சாம்பிள் ஒன்றில் சோயா பீன் அவரை, சூரியகாந்தி, ஆலிவ், ராப் விதை, லிப் விதை, கோதுமை, மக்காச்சோளம், பருத்தி விதை, மீன் எண்ணெய், கொழுப்பு இருக்கலாம்.
சாம்பிள் இரண்டில், தேங்காய் மற்றும் பனை கருப்பட்டி கொழுப்பு
சாம்பிள் மூன்றில் பாம் எண்ணெய் மற்றும் மாட்டிறைச்சி
சாம்பிள் நான்கில் பன்றிக்கொழுப்பு இருந்திருக்கலாம் என்று முடிவுகள் தெரிவிக்கப்படுகின்றன. இவற்றில் எதுவாகவும் இருக்கலாம். எதிலும் உறுதியாக முடிவு சொல்லப்படவில்லை. மீன் எண்ணெய் அல்லது மாட்டுக் கொழுப்புதான் என்று சொல்ல முடியாது. முக்கியமாக standard s value- வரம்பு வைத்து ஒரு முடிவிற்கு வர முடியாது.












Click it and Unblock the Notifications