தேவியை டோலி கட்டி தூக்கி சென்று பிரசவம்.. 5 கி.மீ தூரத்திற்கு நடந்த அவலம்.. ஆந்திராவில்!
பழங்குடி பெண்ணை டோலி கட்டி கர்ப்பிணியை தூக்கி சென்ற அவலம் நேர்ந்துள்ளது
திருப்பதி: கர்ப்பிணி தேவியை டோலி கட்டி 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு தூக்கி சென்று பிரசவம் பார்த்த அவலம் நடந்துள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பாடேறு வனப்பகுதியில் நூற்றுக்கணக்கான மலை கிராமங்கள் உள்ளன. சாலை வசதி இல்லாத இந்த கிராமங்களில் ஆயிரக்கணக்கான மலைவாசி மக்கள் வசித்து வருகின்றனர்.

அதிலும் பாடேறு வனப்பகுதி மலை கிராமங்களில் வசிக்கும் பழங்குடியினர், ஆதிவாசிகள் சாலை வசதி இல்லாத காரணத்தால் தொடர்ந்து பல பிரச்சனைகளை பல வருஷங்களாக சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, பாம்புக்கடி, பூரான், தேள் போன்ற விஷ ஜந்துக்களின் கடி ஏற்பட்டுவிட்டாலோ, பெண்களுக்கு பிரசவ வலி வந்துவிட்டாலோ படு சிரமம்தான்.
அவசர நேரத்தில் நோயாளிகள், கர்ப்பிணிகளை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லவும் ஆம்புலன்ஸ் வருவதற்கான வருவதும் குறைவுதான். அதனால் இந்த மக்கள், ஆம்புலன்ஸை நம்புவது இல்லை.. டோலியில் பல கிலோமீட்டர் தூரம் தூக்கி சென்று, அங்கிருந்தே ஆம்புலன்ஸ்களில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று வருகிறார்கள்.
இப்படித்தான் கொத்தவலச கிராமத்தை சேர்ந்த தேவி என்ற கர்ப்பிணிக்கு பிரசவ வலி வந்துவிட்டது. ஆம்புலன்ஸ்க்காக யாரும் காத்திருக்கவில்லை.. அதனால் தேவியை டேலியில் படுக்க வைத்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு காடு, மலைகள், குளம், குட்டைகளை கடந்து மக்கள் தூக்கி சென்றனர்.
வழியெல்லாம் தேவிக்கு பிரசவ வலி.. துடித்து கொண்டே இருந்தார்.. பிறகுதான் அங்கிருந்த கார் ஒன்றில் ஏற்றி சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு பொதுமக்கள் கொண்டு சென்று பிரசவம் பார்த்தனர். தேவிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அம்மாவும், குழந்தையும் இப்போது சௌக்கியம்தான். ஆனாலும் டிஜிட்டல் இந்தியாவுக்கும், இந்த சம்பவத்துக்கும் எங்கோயோ இடிக்குது!












Click it and Unblock the Notifications