திருப்பதி பக்தர்களுக்கு 20 கோடி கலப்பட லட்டுகள்.. அதிர்ச்சி தகவலை பகிர்ந்த தேவஸ்தான தலைவர்!
திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோவிலில் 2019 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் 49 கோடி லட்டுகள் விற்கப்பட்டதுடன், அதில் 20 கோடி லட்டுகள் கலப்பட நெய்யால் தயாரிக்கப்பட்டவை என தேவஸ்தானத்தின் தலைவர் பி.ஆர்.நாயுடு தெரிவித்துள்ளார்.
ஆந்திரா மாநிலம் திருப்பதியில் உள்ள திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு, நாள்தோறும் உலகம் முழுதும் இருந்து பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். திருப்பதி ஏழுமலையானை போலவே அங்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டும் பிரசித்தம். திருப்பதி தயாரிக்க, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, டெண்டர் விடப்பட்டு, பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து நெய் பெறப்படுகிறது.

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில், அவ்வாறு வழங்கப்பட்ட நெய்யில் கலப்படம் இருந்ததாக புகார் எழுந்தது. சம்பந்தப்பட்ட நெய் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதை அடுத்து, கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டது உறுதியானது.
இது தொடர்பாக, சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இதில், உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த, போலே பாபா பால் பண்ணை மற்றும் அதைச் சார்ந்த நிறுவனங்கள், 250 கோடி ரூபாய் மதிப்புள்ள கலப்பட நெய்யை திருமலை கோவிலுக்கு விநியோகித்தது தெரியவந்தது. இந்த விவகாரம் தொடர்பாக, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் தலைவர் சுப்பா ரெட்டியிடம் சமீபத்தில் எட்டு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்திய சி.பி.ஐ அதிகாரிகள், அவரது முன்னாள் உதவியாளர் சின்னா உபன்னாவை கைது செய்தனர்.
இந்நிலையில், கலப்பட நெய் விவகாரத்தில் அதிர்ச்சி தகவல் ஒன்றை திருமலை திருப்பதி தேவஸ்தான தற்போதைய தலைவர் பி.ஆர்.நாயுடு வெளியிட்டுள்ளார். "கடந்த, 2019 - 2024 வரையிலான காலக்கட்டத்தில், கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு, 48.76 கோடி லட்டுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. அதில், 20 கோடி லட்டுகள் கலப்பட நெய்யால் தயாரிக்கப்பட்டவை.
திருப்பதி கோவிலுக்கு தினசரி மக்கள் வருகை, நெய் கொள்முதல் விபரங்கள், லட்டு உற்பத்தி மற்றும் விற்பனை புள்ளிவிபரங்கள் ஆகியவற்றை வைத்து கணக்கிட்டதன் அடிப்படையில் இது கணக்கிடப்பட்டுள்ளது" எனக் கூறியுள்ளார்.
ஐந்து ஆண்டுகளில், 11 கோடி பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்துள்ளனர். கலப்பட நெய்யால் தயாரிக்கப்பட்ட லட்டுகள் யாருக்கு வழங்கப்பட்டது என்பதை கண்டுபிடிக்க முடியாது. வி.வி.ஐ.பிக்களுக்கு வழங்கப்பட்ட லட்டுகள் கூட கலப்பட நெய்யால் தயாரிக்கப்பட்டதா என்பதை கண்டறிய முடியாது என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications