திருப்பதியில் அலைமோதும் கூட்டம்.. 5.கி.மீ. நீள வரிசை.. இலவச தரிசனம் ரத்து- தேவஸ்தானம் அறிவிப்பு
திருப்பதி: திருப்பதியில் இலவச சர்வ தரிசன டிக்கெட்டுகளை முற்றிலும் ரத்து செய்வதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் விடுமுறை விசேஷ தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருவது உண்டு. அதிலும் புரட்டாசி மாதம், மார்கழி மாதங்களில் திருப்பதியில் கூட்டம் அதிகமாகவே இருக்கும்.

இந்த கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று என்பதால் இந்த கோயிலுக்கு வெளிநாடுகளில் இருந்தும் கூட பக்தர்கள் வருவதுண்டு. இதனால் திருப்பதியில் எப்போதுமே கூட்டம் அதிகமாகவே இருக்கும். கொரோனா நேரத்தில் திருப்பதி கோயில் மூடப்பட்டது, அப்போது மட்டும்தான் கோயிலே காலியாக இருந்தது.
மற்றபடி கொரோனா விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்டதை அடுத்து மக்கள் திருப்பதிக்கு செல்ல தொடங்கினர். இந்த நிலையில் இன்று செப்டம்பர் 30ஆம் தேதி புரட்டாசி 2ஆவது சனிக்கிழமை என்பதாலும் சனி, ஞாயிறு, திங்கள் தொடர்ந்து விடுமுறை என்பதாலும் ஏழுமலையான கோயிலுக்கு பக்தர்கள் படையெடுத்த வண்ணம் இருந்தனர்.
திருப்பதியில் பிரம்மோற்சவமும் நடைபெறுவதால் அதை காண பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. மேலும் தற்போது பெரும்பாலான பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதுவும் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க காரணமாக உள்ளது. இந்த நிலையில் திருப்பதியில் இலவச தரிசனம் செய்ய 5 கி.மீ. தூரத்திற்கு பக்தர்கள் கூட்டம் வரிசையில் நிற்கிறார்கள்.
அவர்கள் தரிசனம் செய்ய 48 மணி நேரம் ஆகிறது. வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸில் 31 அறைகளும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. நேற்று பவுர்ணமி, கருட சேவை என்பதாலும் பக்தர்கள் அதிக அளவில் வருகை தந்தனர். நேற்றைய தினம் அதிகாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே 35 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.
இந்த நிலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதாலும் முண்டியடிப்பதாலும் இலவச சர்வ தரிசன டிக்கெட்டுகளை ரத்து செய்ய தேவஸ்தானம் முடிவு செய்து அறிவித்துள்ளது. அதன்படி அக்டோபர் 1, 7, 8 ,14, 15 ஆகிய தேதிகளில் ஒதுக்கப்பட்ட இலவச தரிசன டிக்கெட்டுகளை முற்றிலும் ரத்து செய்வதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications