இஸ்கான் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்! திருமலை திருப்பதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
திருப்பதி: திருப்பதியில் இஸ்கான் கோயில் மற்றும் வெளிநாட்டினர் தங்கும் விடுதியில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் உஷார் நிலையில் இருக்கிறது.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள். இவர்கள் திருப்பதி, திருமலையில் உள்ள ஹோட்டல்களில் தங்கி சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள். தற்போது புரட்டாசி மாதமும் பிரம்மோற்சவ விழாவும் முடிந்துவிட்டன.

எனினும் ஏழுமலையானை தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை குறையவில்லை. இந்த நிலையில் திருப்பதியில் உள்ள இஸ்கான், வராக சுவாமி கோயில்களில் வெடிகுண்டு வைத்துள்ளதாக இமெயில் மூலம் மிரட்டல் வந்ததாக தெரிகிறது.
ஆனால் திருப்பதியில் வராக சுவாமி கோயில் இல்லை என்பதால் திருப்பதி போலீஸார் இஸ்கான் கோயிலுக்கு சென்று அங்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களை வெளியே அனுப்பிவிட்டு கோயில் முழுவதும் சோதனை செய்தனர். அப்போதுதான் அது புரளி என்பது தெரியவந்தது.
இது போல் திருப்பதியில் வெளிநாட்டினர் தங்கும் சில நட்சத்திர விடுதிகளுக்கும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் இ மெயில் மூலம் வருகிறதாம். இதை யார் எங்கிருந்து அனுப்புகிறார்கள் என தெரியவில்லை. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதைத் தொடர்ந்து திருமலை, திருப்பதியில் பாதுகாப்பு முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதற்காக சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இரவும் பகலும் 24 மணி நேரமும் கண்காணிப்பு செய்யப்பட்டு வருகின்றன. திருமலை முழுவதும் ஆக்டோபஸ் கமாண்டோக்களை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்குரிய நபர்கள் புகைப்படங்கள் மத்திய மாநில போலீஸாருக்கு பகிரப்பட்டுள்ளன. அது போல் திருமலையில் 28 இடங்களில் முக அடையாளம் கண்டறியும் சோதனையும் நடத்தப்படுகிறது. ஸ்ரீவாரி மெட்டு முதல் திருமலை வரை 100-க்கும் மேற்பட்ட கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications