திருமலை திருப்பதியில் பட்டு சால்வை கொள்முதலில் மோசடி! புதிய முடிவை எடுத்த தேவஸ்தானம்
திருப்பதி: திருமலையில் கடந்த ஆண்டு பட்டு சால்வை மோசடி அம்பலமானதைத் தொடர்ந்து, திருமலை திருப்பதி தேவஸ்தானம் முக்கிய கொள்முதல் முடிவை அறிவித்துள்ளது.
விநியோகத்தில் இடையூறைத் தவிர்க்க, ₹43 கோடி மதிப்பிலான பட்டுச் சேலைகள் உள்ளிட்ட ஜவுளிப் பொருட்களை ஆப்கோ (APCO) மற்றும் கோ-ஆப்டெக்ஸ் (Co-optex) ஆகிய அரசு நெசவாளர் கூட்டுறவு சங்கங்களிடமிருந்து 50:50 விகிதத்தில் வாங்க TTD தீர்மானித்துள்ளது.

கடந்த ஆண்டு தேவஸ்தானத்தின் குற்றச்சாட்டின்படி, மல்பெரி பட்டு சால்வைகளுக்கு பதிலாக, 2015 முதல் 2025 காலகட்டத்தில் ஒரு நிறுவனம் 100% பாலியஸ்டர் சால்வைகளை விநியோகித்தது. ரூ.350 முதல் ரூ. 400 மதிப்புள்ள சால்வைகள் ரூ.1,389க்கு வாங்கப்பட்டதாக தேவஸ்தானம் தெரிவித்தது. இம்மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத் துறையை தேவஸ்தானம் வலியுறுத்தியது.
தேவஸ்தானம், திருமலை ஸ்ரீவாரி கோயில் உட்பட நாடு முழுவதும் 60க்கும் மேற்பட்ட கோயில்களை நிர்வகித்து வருகிறது. இவற்றில், திருமலை ஸ்ரீவாரி கோயிலுக்கு மட்டும் ஆண்டுதோறும் சுமார் 65 தூய ஜரி மெல்சாட், உத்திரியம் ஆடைகள் மற்றும் 1,080 தூய ஜரி கைத்தறி பட்டுச் சேலைகள் தேவைப்படுகின்றன.
உள்ளூர் தேவஸ்தான கோயில்களுக்கு 320 மெல்சாட், உத்திரியம் செட், 128 ஒன்பது கஜ மற்றும் 300 ஆறு கஜ கைத்தறி பட்டுச் சேலைகள் தேவை. அத்துடன், 36,000 பவர்லூம் பட்டு சால்வைகள், 60,000 பாலியஸ்டர் சால்வைகள், 10.8 லட்சம் பருத்தி ஆடைகள், 9 லட்சம் பருத்தி ஜாக்கெட் துண்டுகளும் தேவஸ்தானத்திற்கு வருடந்தோறும் அவசியமாகின்றன.
இந்த கொள்முதல் முடிவின் ஒரு பகுதியாக, தேவஸ்தானத்தின் உதவி நிர்வாக அதிகாரி வெங்கையா சௌத்ரி, ஆப்கோ மற்றும் கோ-ஆப்டெக்ஸ் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். தேவஸ்தானம் கோரிய அனைத்து வஸ்திரங்களையும் சரியான நேரத்தில் வழங்க இந்த நிறுவனங்கள் உடன்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications