இந்த 1500ஐ வாங்கிக்க ராசா.. அமைச்சர் சாமிநாதனை நெகிழவைத்த மாற்றுத்திறனாளி அருக்காணி பாட்டி!
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அமைச்சர் சாமிநாதனை சந்தித்து முதல்வரின் கொரோனோ நிவாரண நிதிக்கு 1500 ரூபாய் நிதி அளித்த மாற்றுத்திறனாளி பெண் கூலி தொழிலாளி அனைவரின் மனதையும் நெகிழ வைத்தார்.
கொரோனா நிவாரண நிதியாக தங்களால் முடிந்த தொகையை பலரும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பி வருகிறார்கள். கோடீஸ்வரர்கள் கோடிகளிலும், பல லட்சங்களையும் அனுப்பி உள்ளார்கள்.
கூலித்தொழிலாளிகள், மாதச் சம்பளம் வாங்குவோர் பலர் தங்களால் முடிந்த தொகையை அனுப்பி வருகிறார்கள். அடுத்த வேளைக்கு உணவுக்கு கூட கடினமாக போராடும் மக்கள் பலர் தங்களின் சொற்ப வருமானத்தையும் முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பி நெகிழ வைத்து வருகிறார்கள்.
ஏழை மக்கள் நன்கொடை
காவலாளி ஒருவர் அண்மையில் ஒரு மாத சம்பளத்தை அனுப்பி நெகிழ வைத்தார். இதேபோல் போலீஸ்காரர் ஒருவர் தனது ஒரு மாத சம்பளத்தை அப்படியே அனுப்பி வைத்தார். அரசு வழங்கிய இரண்டாயிரம் கொரோனா நிவாரண நிதியை அப்படியே முதல்வரின் நிவாரண நிதிக்கு அனுப்பிய பாட்டிகளும், பெண்களும் தமிழ்நாட்டில் ஏராளம். கொரோனா நிவாரண நிதியாக தங்கள் உண்டியல் சேமிப்பை வழங்கிய குழந்தைகளும் ஏராளம்
மருந்துக்கு செலவு
இப்படி மக்கள் அனுப்பும் ஒவ்வொரு ரூபாயும் எப்படி செலவழிக்கப்படுகிறது என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கடி வெளிப்படையாக அறிவித்து வருகிறார். மருந்து வாங்கவும், தடுப்பூசிகள் வாங்கவும் அந்த நிதியை பயன்படுத்தி வருகிறார்.
உதவி செய்ய முடிவு
இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த மூலனூர் காவல் நிலையம் எதிரே வசித்து வருபவர் அருக்காணி (வயது 70) மாற்றுத்திறனாளியான இவர் பனியன் துணிகளை பிடிக்கும் கூலி வேலை செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்தில் தானும் ஏதாவது பங்களிப்பை செய்ய வேண்டும் என முடிவெடுத்தார்.
கையில் திணித்தார்
மூலனூர் கொரோனா சிகிச்சை மையம் துவக்க விழாவில் பங்கேற்க செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வந்திருந்தார்.. அப்போது தனது சேமிப்பு தொகையான 1,500 ரூபாயை கொரொனோ நிவாரண நிதிக்கு அமைச்சரிடம் அளித்தார்.. மூதாட்டியை பாராட்டிய அமைச்சர் சாமிநாதன் உங்கள் பெயரில் இந்த தொகையை நானே செலுத்தி விடுகிறேன் என்று பணத்தை பெற மறுத்தார்...ஆனாலும் மூதாட்டி ஏற்க மறுத்து பணத்தை ஒப்படைத்தார்...இதை பார்த்த பொதுமக்கள் பலர் நெகிழ்ச்சியை அடைந்து மூதாட்டியை பாராட்டினார்கள்.