திருப்பூரில் பெருமாள் கோயிலில் யார் பாருங்க.. வாசலில் கையில் தட்டுடன்.. இதுதானே நமக்கு வேணும் சபாஷ்
திருப்பூர்: திருப்பூரில் நடந்த நிகழ்வு ஒன்று இணையத்தில் வீடியோவாக வெளிவந்து பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. இன்று வெகுசிறப்பாக கும்பாபிஷேகம் நடந்துள்ள பெருமாள் கோயிலில் இன்னொரு சிறப்பும் நடந்திருக்கிறது.
திருப்பூர் மாவட்டம் மங்கலம் பகுதியில் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவில் அமைந்துள்ளது.. இந்த கோவில் வளாகத்திலேயே ஸ்ரீ விஷ்வக்சேனர், ஸ்ரீ கருடாழ்வார், ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்கள் உள்ளன.

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று காலை வெகு சிறப்பாக நடைபெற்றது... இந்த கும்பாபிஷேக விழாவையொட்டி, கடந்த 13 ம் தேதி முதலே நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் நடைபெற்று வருகிறது.
யாக பூஜைகள்: அந்தவகையில், நேற்று காலை முதலாம் கால யாக சாலை பூஜை, இரண்டு மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகளும் நடந்தது. இன்று அதிகாலை நான்காம் கால யாக பூஜைகளைத் தொடர்ந்து கும்பாபிஷேகம் நடந்தது. இன்று காலை 9:00 மணிக்கு நடந்த இந்த விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
முன்னதாக, இந்த கும்பாபிேஷக விழாவில் பங்கேற்க வருமாறு, திருப்பணிக்குழுவினர், மங்கலம் சுன்னத் ஜமாத் பெரிய பள்ளி வாசல் நிர்வாகிகளுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்திருந்தனர்.. இந்த அழைப்பை ஏற்று பள்ளி வாசல் நிர்வாகிகள் உட்பட ஏராளமான இஸ்லாமிய சகோதரர்கள், பல்வேறு சீர்வரிசைத்தட்டுகளுடன் பெருமாள் கோவிலுக்கு சென்றார்கள்.
பெரிய பள்ளிவாசல்: அதாவது, மங்கலம் இஸ்லாமியர்களின் பூர்வீக பள்ளிவாசலான மங்கலம் சுன்னத்வல் ஜமாஅத் பெரியபள்ளிவாசல் சார்பில் மங்கலம் பெரிய பள்ளிவாசலில் இருந்து ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு 7 சீர்வரிசை தட்டுகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.
அவர்களை வரவேற்ற கோவில் நிர்வாகிகள் சீர்வரிசை தட்டுக்களைப் பெற்றுக்கொண்டு, பள்ளி வாசல் நிர்வாகிகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்..
பாராட்டு: கோவில் நிர்வாகம் சார்பில் இஸ்லாமிய சகோதரர்களுக்கு பிரசாத பைகளும் வழங்கப்பட்டன.. இந்து - முஸ்லிம் இரு தரப்பினருமே அழைப்பு விடுத்ததற்கும், விழாவுக்கு வந்ததற்கும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் நன்றி தெரிவித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டார்கள். மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக நடைபெற்ற இந்த நிகழ்வு காண்போரை சிலிர்க்க வைத்துள்ளதுடன், பல தரப்பினரின் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications