அவிநாசி ரோட்டில் நாகப் பாம்புடன் நின்ற விஜயகாந்த்.. திருப்பூர் தோட்டத்தில் கிளம்பி வந்த சாரைப்பாம்பு
திருப்பூர்: திருப்பூர் அவிநாசி விஜயகாந்த் மீது வன உயிரின குற்றத்தடுப்பு பிரிவினருக்கு நிறைய புகார்கள் வந்தவண்ணம் இருந்தன.. இது தொடர்பான விசாரணையை வனத்துறையினர் மேற்கொண்டபோதுதான் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. என்ன நடந்தது அவிநாசியில்? விஜயகாந்த் தோட்டத்தில் என்ன இருந்தது?
பாம்புகள் என்றாலே மக்கள் நடுநடுங்கி போய்விடுகிறார்கள் என்றாலும்,பாம்புகளின் விஷம் மிக மதிப்புள்ள பொருளாக கருதப்படுகிறது.
சிலர் அதை சட்டவிரோதமாக சேகரித்து, வெளிநாடுகளுக்கு கடத்துகிறார்கள். இந்த விஷம் மருந்து தயாரிப்பு, ஆய்வுகள் போன்ற பெயர்களில் கருப்பு சந்தையில் அதிக விலையில் விற்கப்படுகிறது. அதனால் லாப ஆசையால் சிலர் பாம்புகளை பிடிக்கிறார்கள்.

பாம்புகள் கடத்தல்
சில இடங்களில் பாம்பு தோல் பயன்படுத்தி பெல்ட், பை, காலணி போன்ற பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்தியாவில் இது முழுமையாக தடை செய்யப்பட்டிருந்தாலும், சர்வதேச சந்தையில் இதற்கு தேவை இருப்பதால் கடத்தல்கள் மறைமுகமாகவே நடக்கின்றன..
அதுமட்டுமல்ல, மூடநம்பிக்கைகள். பாம்பு மணி, பாம்பு எலும்பு, விஷம் போன்றவை மந்திரம், தந்திரம், செல்வம் கிடைக்கும் என்று நம்பி சிலர் சட்டவிரோதமாக வாங்குகிறார்கள்.. அதனால்தான் பாம்புகளை கடத்துவதும் பெருகுகிறது.. சிலர் பாம்பாட்டி வேஷத்தில் சட்டவிரோதமாக பாம்புகளை வைத்துக்கொண்டு காட்சிப்படுத்துவதாலும் கடத்தல்கள் நடக்கின்றன.. இப்படியான காரணங்களினால் பாம்புகள் அழிந்து போகும் அபாயம் உள்ளது..
திருப்பூர் விஜயகாந்த் நாகப்பாம்பு
அதனால்தான், வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாம்புகளை பிடிப்பது, விற்குவது, வைத்திருப்பது அனைத்தும் குற்றமாக்கப்பட்டுள்ளது.. பாம்புகளை யாராவது சட்டவிரோதமாக பிடித்தால் வனத்துறையினர் அவர்களை கைது செய்கிறார்கள்... அப்படித்தான் ஒருவர் அவிநாசியில் நேற்று சிக்கி உள்ளார்.. அவர் பெயர் விஜயகாந்த்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி ராயன் கோவில் பகுதியை சேர்ந்தவர்தான் விஜயகாந்த்.. இவருக்கு 40 வயதாகிறது.. பாம்பு பிடிப்பதில் நிபுணர் என கூறப்படும் நபர், சட்டவிரோதமாக பாம்புகளை விற்பனை செய்து வந்ததாக புகார் எழுந்தது.
தண்ணீர் பாம்பு - அவிநாசி ரோடு
இதையடுத்து கோவை வன உயிரின குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள், விஜயகாந்த்தை ரகசியமாக கண்காணிக்க முடிவு செய்தார்கள்.. இதற்காக பாம்பு வாங்க வருபவர்கள் போல அதிகாரிகள், விஜயகாந்தை தொடர்பு கொண்டனர்..
நாக பாம்பு தங்களுக்கு வேண்டும் என்றும், அதற்கு 5 லட்சம் ரூபாய் தருவதாகவும் சொன்னார்கள்.. நாகப்பாம்பு கிடைத்தால் அவிநாசி – சேவூர் சாலை சிந்தாமணி அருகே வந்துகொண்டு வந்து தந்துவிட்டு, பாம்புக்கான பணத்தையும் பெற்றுக்கொள்ளும்படி விஜயகாந்திடம் சொன்னார்கள்..
விஜயகாந்த் தோட்டம் - பாட்டிலில் சாரைப்பாம்பு
அதன்படியே விஜயகாந்தும், நாகப்பாம்பை ஒரு பையில் போட்டுக்கொண்டு, அவிநாசி – சேவூர் சாலை சிந்தாமணி பகுதிக்கு சென்றார்.. அங்கு ஏற்கனவே தயாராக நின்றுகொண்டிருந்த வனத்துறையினர் பாம்பை விஜயகாந்திடம் வாங்கியதுமே, அடுத்த நொடியே அவரை கையும் களவுமாக பிடித்தனர்.
இதனைத் தொடர்ந்து ஒச்சம்பாளையத்தில் உள்ள விஜயகாந்தின் தோட்டத்தில் சோதனை நடத்தப்பட்டது. அங்கு பாட்டில்களில் அடைத்து உயிருடன் வைத்திருந்த 3 சாரை பாம்புகள், ஒரு தண்ணீர் பாம்பு பறிமுதல் செய்தனர்..
பாம்புகளை சட்டவிரோதமாக வைத்திருந்ததும், விற்பனை செய்ய முயன்றதும் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. மீட்கப்பட்ட பாம்புகள் பாதுகாப்பாக வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த சம்பவம் சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்தின் ஆபத்தை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.












Click it and Unblock the Notifications