அவிநாசியில் தொண்டர்கள் பலத்தை காட்டிய எடப்பாடி.. ஆ.ராசாவிற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்பூர்: எம்ஜிஆர் முகத்தை வைத்துதான் திமுக ஆட்சிக்கு வந்தது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். காற்றில் கூட ஊழல் செய்த ஆ.ராசாவுக்கு எம்ஜிஆர் பற்றி பேச தகுதி இல்லை என்றும் திமுகவை வேரோடு அழிக்க வேண்டும் என எம்ஜிஆர் கூறியது தற்போது நடக்கிறது என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
மறைந்த தமிழ்நாடு முதலமைச்சரும் அதிமுக நிறுவனருமான எம்ஜிஆரை விமர்சித்து பேசிய திமுக எம்பி ஆ.ராசாவுக்கு எதிராக அதிமுக நிர்வாகிகள் கொந்தளித்து போயுள்ளனர். பல இடங்களிலும் ஆ.ராசாவிற்கு எதிரான கருத்துக்களை பேசி வருகின்றனர்.

சில தினங்களுக்கு முன்பு கோவையில் நிர்வாகிகள் மத்தியில் பேசிய எஸ்.பி. வேலுமணி, கொடுத்து கொடுத்து சிவந்த கரங்களை கொண்டவர் எம்ஜிஆர். யார் கட்சி ஆரம்பித்தாலும் எம்.ஜி.ஆர் பெயரை சொல்லாமல் தொடங்க முடியாது. ஆ.ராசா முன்பு எடப்பாடியாரின் தாயாரை விமர்சித்தார். இன்று எம்ஜிஆரையும் விமர்சித்துள்ளார். தெய்வமாக உள்ள எம்ஜிஆரை மோசமான வார்த்தையை சொல்லி பேசியுள்ளார். இதற்கு தற்போது வரை திமுக தலைவர் கண்டனம் தெரிவிக்கவில்லை. எம்ஜிஆரை பெரியப்பா என மு.க ஸ்டாலின் சொல்லுவார்.
கருணாநிதி குடும்பம் கடனில் இருக்கும் போது படம் நடித்துக்கொடுத்தார். திமுக ஆட்சிக்கு வர காரணமாக இருந்தவர் எம்ஜிஆர். திமுகவை வளர்த்தவர் எம்ஜிஆர். இதை அண்ணாவே சொல்லி இருக்கிறார். மக்கள் நிச்சயம் அவர்களுக்கு பாடம் புகட்டுவார்கள். ஆ.ராசாவிற்கு எதிராக நம் கோபத்தை காட்ட வேண்டிய இடம் அவினாசி. அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

எஸ்.பி. வேலுமணி சொன்னது போலவே அதிமுக தொண்டர்கள் லட்சக்கணக்கானோர் அவிநாசியில் திரண்டுள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் 30 ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி அதிமுக தான். இந்த 30 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தான் தமிழ்நாடு முன்னேற்றம் அடைந்தது. எம்ஜிஆர் முகத்தை வைத்துதான் திமுக ஆட்சிக்கு வந்தது. எம்ஜிஆர்-ன் முகம் காட்டித் தான் 1967-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தது.

காற்றில் கூட ஊழல் செய்த ஆ.ராசாவுக்கு எம்ஜிஆர் பற்றி பேச தகுதி இல்லை. திமுகவை வேரோடு அழிக்க வேண்டும் என எம்ஜிஆர் கூறியது தற்போது நடக்கிறது. அதிமுகவினர் வெகுண்டெழுந்தால் ஆ.ராசாவால் தாங்க முடியுமா? என்றார். எம்ஜிஆர் பற்றி அவதூறு பேசிய ஆ.ராசாவுக்கு நாவடக்கம் தேவை.
அவதூறு பேசுவதை தவிர்த்து ஆ.ராசா நல்லதை மட்டும் பேச வேண்டும். அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை திமுக அரசு முடக்கியுள்ளது. மக்களின் 50 ஆண்டுகால போராட்டத்திற்கு மதிப்பளித்து அதிமுகவின் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை திமுக கிடப்பில் போட்டது என்றும் குற்றச்சாட்டை முன்வைத்தார் எடப்பாடி பழனிச்சாமி.












Click it and Unblock the Notifications