பள்ளி ஹாஸ்டலில் ’கொரில்லா’ வார்டன்.. 17 மாணவர்களுக்கு பாலியல் தொல்லை! ஒட்டுமொத்தமாய் தூக்கிய போலீஸ்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அருகே பள்ளி விடுதியில் தங்கியிருந்த 17 மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக விடுதி வார்டன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் மாணவர்கள் புகார் அளித்து நடவடிக்கை எடுக்காமல் அவர்களை தாக்கியதாக தலைமை விடுதி கண்காணிப்பாளரும், பள்ளியில் தாளாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் கல்வி நிலையங்களில் மாணவ மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்து வருவது பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி கிங்சிலிங் பள்ளியில் போலி என்சிசி முகாமில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை, திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழக பெண்கள் விடுதியில் இணையதள இணைப்பை பழுது பார்க்க வந்த நபர் மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதோடு, மாணவியின் உடை குறித்து பேசிய கல்லூரி வார்டன் மாணவியை திட்டியதாக புகார் எழுந்தது.
இதேபோல வால்பாறை அரசு கல்லூரியில் தற்காலிக பேராசிரியர்கள், ஆய்வு கூட உதவியாளர், என்சிசி பயிற்சியாளர் தங்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக மாணவிகள் கூறியிருந்தனர். இந்த அதிர்ச்சி ஓய்வதற்குள் நேற்று திருச்செந்தூர் பள்ளியில் மாணவிகளை விளையாட்டு போட்டிக்கு அழைத்துச் சென்று அவர்களை மது குடிக்க வைத்ததோடு பாலியல் சீண்டலில் ஈடுபட்ட உடற்கல்வி ஆசிரியர் பென்சிங் கைது செய்யப்பட்டார்.
மேலும் அவருக்கு உடந்தையாக செயல்பட்டதாக பள்ளியின் முதல்வரும், செயலாளரும் கைது செய்யப்பட்டனர். இதை அடுத்து பள்ளி கல்லூரிகளில் மாணவ மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறையும் தமிழக அரசும் எச்சரித்து இருந்தது. இந்த அறிவிப்பு வெளியாகி சில மணி நேரங்கள் கூட ஆகாத நிலையில் திருப்பூரில் விடுதியில் 17 மாணவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியில் விடுதியும் செயல்பட்டு வரும் நிலையில் தலைமை கண்காணிப்பாளராக ராம் பாபு, என்பவரும் வார்டனாக சரண் என்பவரும் பணியாற்றி வருகின்றனர். அந்த விடுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த விடுதியில் தங்கியிருந்த 17 மாணவர்களிடம் விடுதி கண்காணிப்பாளரான சரண் என்பவர் பல மாதங்களாக பாலியல் ரீதியாக அத்துமீறி வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் இரவு நேரங்களில் அவர்களை தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு படிக்கும் சில மாணவர்கள் விடுதி வார்டன் சரண் தங்களிடம் பல மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளி முன்பு திரண்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில் திருப்பூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து அங்கு வந்த போலீசார் மாணவர்களின் உறவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து பள்ளி வார்டன் சரண் கைது செய்யப்பட்டார். மேலும் மாணவர்களிடம் நடத்திய விசாரணையில் ஏற்கனவே அவர்கள் இது குறித்து புகார் தெரிவித்ததாகவும், ஆனால் விடுதியில் தலைமை கண்காணிப்பாளரான ராம்பாபு மற்றும் பள்ளி முதல்வர் இதனை வெளியே சொல்ல கூடாது என மிரட்டியதோடு தங்களை அடித்ததாக அதிர்ச்சி தரும் தகவலை கூறினர்.
இதை அடுத்து சரனை கைது செய்த போலீசார் தலைமை விடுதி கண்காணிப்பாளரான ராம் பாபு மற்றும் பள்ளியின் தாளாளரான சுரேஷ்குமாரையும் கைது செய்தனர். மேலும் மாணவர்களிடம் தனித்தனியாக புகார் பெற்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications