கேரளாவில் 26 கிலோ தங்கம் திருட்டு.. திருப்பூரில் அடகு வைத்த வங்கி மேனேஜர்.. சிக்கியது எப்படி?
திருப்பூர்: கேரளாவின் கோழிக்கோடு நகரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பணியாற்றி மேனேஜர் அங்கு 26 கிலோ நகைகளை திருடியிருக்கிறார். அதில் கணிசமான தங்க நகைகளை திருப்பூரில் அடகு வைத்துள்ளார். இது தொடர்பாக கைதான மேனேஜரின் தகவலின் பேரில், 4.6 கிலோ தங்க நகைகளைத் திருப்பூரில் உள்ள தனியார் வங்கியின் இரண்டு கிளைகளில் இருந்து கேரள போலீசார் மீட்டனர்.
கேரளா மாநிலம் கோழிக்கோடு வடகராவில் செயல்பட்டு வரும் பாங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியின் கிளையில் ஜெயக்குமார் என்பவர் (34 வயது) மேலாளராக கடந்த மூன்று ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இவர் திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்தவர் ஆவார். இதனிடையே ஜெயகுமார் ஜூலை மாதம் எர்ணாகுளம் பழறிவோட்டம் கிளைக்கு மாற்றப்பட்டார். அதன் பின்னர் அங்கு தணிக்கை நடத்தப்பட்டது. வாடிக்கையாளர்கள் அடகு வைத்த ரூ.17.5 கோடி மதிப்புள்ள 26.8 கிலோ தங்க நகைகள் போலி நகைகள் மூலம் மாற்றி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதனிடையே இடமாற்றம் செய்யப்பட்ட வங்கி மேலாளர் ஜெயக்குமார் எர்ணாகுளத்தில் பணிக்கு வராததால், வங்கி அதிகாரிகள் சந்தேகம் அடைந்து கோழிக்காடு மாவட்டம் வடகரை போலீசில் புகார் செய்தனர். வடகரை போலீசார் நடத்திய விசாரணையில் ஜெயக்குமார் தங்கத்தை திருடிவிட்டு போலி நகைகளை வைத்து வங்கி நிர்வாகத்தை ஏமாற்றியது தெரியவந்தது.
இதையடுத்து அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கேரள தனிப்படை போலீசார் தெலுங்கானா மாநிலம் சென்று, அங்கு பதுங்கி இருந்த வங்கி மேனேஜர் ஜெயக்குமாரை அதிரடியாக கைது செய்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், நகைகளின் ஒரு பகுதியை திருப்பூரில் உள்ள இரண்டு தனியார் வங்கிக் கிளைகளில் அவரது நண்பர் சந்திராபுரம் கேஎன்பி காலனியைச் சேர்ந்த என்.கார்த்திக் (29) என்பவர் மூலம் அடகு வைத்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து கேரள தனிப்படை போலீசார் ஜெயக்குமாருடன் வந்து, நேற்று திருப்பூருக்கு வந்தனர். இதனிடையே போலீஸ் தேடுவதை அறிந்து ஏற்கனவே கார்த்திக் தலைமறைவாகி விட்டார்.
கார்த்திக் பணிபுரிந்த திருப்பூர் ரயில் நிலையம் அமைந்துள்ள புஷ்பா சந்திப்பில் உள்ள வங்கிக் கிளைக்கும், காங்கேயம் சாலையில் உள்ள வங்கிக் கிளைக்கும் கேரள போலீசார் சென்றனர். அங்கு கொள்ளையடித்து அடகு வைக்கப்பட்ட, 4.6 கிலோ தங்க நகைகளை மீட்டனர். இதனிடையே தங்க நகை திருட்டில் தொடர்புடைய கார்த்திக் மற்றும் அவருடன் வழக்கில் தொடர்புடையவர்களை போலீசார் தேடி வருகின்றனர். 4.5 கிலோ தங்க நகைகளை கைப்பற்றிய கேரள போலீசார், ஜெயக்குமாரை மீண்டும் கேரளாவுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications