தமிழர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்? நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்பூரில் போராட்டம்! பதற்றம்
திருப்பூர்: திருப்பூரில் தமிழக இளைஞர்களை வடமாநிலத்தவர் ஓட ஓட விரட்டியதாக வெளியான வீடியோ பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பிழைப்பு தேடி தமிழ்நாட்டிற்கு வருகை தருவது தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. வடமாநிலங்களில் சம்பளம் குறைவாக உள்ளதாலும் வேலைவாய்ப்பு பெரியளவில் இல்லை என்பதாலும் அவர்கள் தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள்.
ஹோட்டல், கட்டிட பணிகளுக்கு வெளிமாநில தொழிலாளர்களே அதிகம் இங்கு வருகிறார்கள்.. இருப்பினும், இப்படி அதிகப்படியாக வரும் வடமாநிலத்தவரால் தமிழர்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்ற புகார் இருந்து கொண்டேதான் இருக்கிறது.

வடமாநிலத்தவர்
ஊதியம், தொடர்ச்சியாக வேலை கிடைப்பது உள்ளிட்டவற்றால் வடமாநில தொழிலாளர்களைத் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு வர ஆர்வம் காட்டுகிறார்கள். இது எப்போதோ நடக்கும் சம்பவம் இல்லை.. வட இந்தியாவில் இருந்து வரும் எந்தவொரு ரயில்களைப் பார்த்தாலும் நமக்கு இது புரியும். வடமாநிலத்தவர் மார்கெட்டை காட்டிலும் குறைந்த விலையில் வேலை பார்ப்பதாகவும் இதன் காரணமாகவே தமிழர்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்ற புகாரும் எழுந்துள்ளன.

திருப்பூர்
இருப்பினும், குறைந்த விலையில் ஆட்கள் தேவை இருப்பதால் வடமாநிலத்தவர் தொடர்ந்து இங்கு வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். முதலில் சென்னை உட்பட பெருநகரங்களில் மட்டுமே இவர்கள் அதிகம் வந்து கொண்டிருந்த நிலையில், இப்போது சென்னையைத் தாண்டி மற்ற சிறு நகரங்களிலும் செட்டில் ஆகத் தொடங்கியுள்ளனர். குறிப்பாகத் திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்குச் சென்றால் வடமாநிலத்தவரையே பெரும்பாலான இடங்களில் பார்க்க முடியும்.

பரபர வீடியோ
இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் தமிழக இளைஞர்களை ஓட ஓட விரட்டுவது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாகப் பரவி வந்தது. இது எங்கோ எடுத்தது இல்லை.. நம்ம திருப்பூரில் நடந்த சம்பவம் தான் இது. அங்கிருந்த தமிழக இளைஞர்களைப் பல நூறு வடமாநிலத்தவர்கள் இணைந்து ஓட ஓட விரட்டிய சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகப் புயலைக் கிளப்பியது.

போராட்டம்
அனுப்பர் பாளையத்தில் தமிழக தொழிலாளர்களைத் தாக்க முயன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் வடமாநில தொழிலாளர்களின் செயலுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து சம்பந்தப்பட்ட பனியன் அலுவலகத்தைத் திருப்பூர் மேயர் ந.தினேஷ்குமார் ஆய்வு செய்து போராடியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
இருப்பினும், தமிழர்களைத் தாக்கிய வடமாநிலத் தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டும் நேற்று பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தினர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமாதானப்படுத்தினர். இதனால் அங்குச் சற்று பதற்றமான ஒரு சூழல் உருவானது.

போலீசார் விளக்கம்
இதன் காரணமாகப் பாதுகாப்பு கருதிச் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இது தொடர்பாகத் திருப்பூர் போலீசார் தரப்பில் கூறுகையில், "புகை பிடித்தல் குறித்து இரு தரப்பிற்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை தகராறாக மாறியுள்ளது. இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இருப்பினும், சமூக வலைத்தளங்களில் சிலர் தவறான தகவல் பரப்பி வருகின்றனர்" என்றார்.












Click it and Unblock the Notifications