ஈரோடு சுங்கச்சாவடியில் கட்டணமே இல்லை.. விஜய் வருகையால் வாகன ஓட்டிகளுக்கு இன்ப அதிர்ச்சி
திருப்பூர்: ஈரோடு அருகே விஜயமங்கலத்தில் இன்று த.வெ.க. பொதுக்கூட்டம் நடந்து வருகிறது. தவெக தலைவர் விஜய் அங்கு பரப்புரை செய்யும் இடத்திற்கு கோவையில் இருந்து காரில் வருகிறார். இதையடுத்து விஜய மங்கலம் டோல்கேட் திறக்கப்பட்டு அனைத்து வாகனங்களும் இலவசமாக பயணிக்கிறது. டோல்கேட் சுற்றி ஏராளமானோர் திரண்டதால் போலீசார் பொதுமக்களை ஓரமாக நிற்க அறிவுறுத்தினார்கள்.
தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக கட்சியின் தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். எனினும் கரூர் சம்பவத்துக்கு பிறகு எங்குமே அவர் கலந்து கொள்ளவில்லை. அதேநேரம் கடந்த மாதம் காஞ்சிபுரத்தில் ஒரு தனியார் கல்லூரியில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து அண்டை மாநிலமான புதுச்சேரியில் கடந்த 9-ந் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் விஜய் பங்கேற்று தொண்டர்களிடம் பேசினார்.

இதனிடையே கரூர் சம்பவத்துக்கு பின்னர், தமிழ்நாட்டில் விஜய் கலந்து கொள்ளும் பிரமாண்ட பொதுக்கூட்டமாக ஈரோடு பொதுக்கூட்டம் இருக்கிறது. ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளையில் இன்று த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக 16 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்ட மைதானம் பிரமாண்டமாக அமைக்கப்பட்டது. 60 ஏக்கரில் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தம், 20 ஏக்கரில் 2 சக்கர வாகனங்கள் நிறுத்தம் என வாகன நிறுத்தத்துக்காக மட்டும் 80 ஏக்கர் பரப்பளவில் இடம் தயார் செய்திருந்தார்கள். இன்று காலை 11 மணிக்கு கூட்டம் தொடங்கியது. பிற்பகல் 1 மணிவரை கூட்டம் நடைபெறுகிறது.
மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்து கொண்டு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் பேசுகிறார். இதற்காக சென்னையில் இருந்து விமானத்தில் கோவை விமான நிலையத்துக்கு வந்தார். அங்கிருந்து கார் மூலம் நேராக விஜயமங்கலம் பொதுக்கூட்ட மைதானத்துக்கு சென்றார். அங்கு பிரத்தியேக பிரசார வாகனத்தில் நின்று கொண்டு பொதுமக்களை சந்தித்து அவர்கள் மத்தியில் பேச உள்ளார்.
எனவே சாலைகளில் நெரிசலை குறைக்கவும், தொண்டர்கள் பொதுமக்கள் சரியாக வாகன நிறுத்தம் பகுதிக்கு வந்து பொதுக்கூட்ட மைதானத்துக்கு வரும் வகையில் வழித்தடங்களை போலீசார் அறிவித்துள்ளனர். ஈரோடு மாவட்ட எஸ்பி சுஜாதா தலைமையில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். 60 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மைதானத்தை சுற்றிலும் தொட்டிகள் வைக்கப்பட்டு குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. நடமாடும் குடிநீர் வினியோக வசதியும் உள்ளது.

பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பாஸ் மற்றும் கியூஆர்கோடு அட்டைகள் தேவை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளதால் எதிர்பார்த்ததை விட தொண்டர்கள், பொதுமக்கள் அதிக அளவில் குவிந்து வருகிறார்கள். எனவே அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க பலத்த கட்டுப்பாடுகள், நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.
இதனிடையே தவெக தலைவர் விஜய் அங்கு பரப்புரை செய்யும் இடத்திற்கு கோவையில் இருந்து காரில் வருகிறார். இதையடுத்து விஜய மங்கலம் டோல்கேட் திறக்கப்பட்டு அனைத்து வாகனங்களும் இலவசமாக பயணிக்கிறது. டோல்கேட் சுற்றி ஏராளமானோர் திரண்டதால் போலீசார் பொதுமக்களை ஓரமாக நிற்க அறிவுறுத்தினார்கள். காரில் சென்ற பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications