கொலைக் களமாகும் கொங்கு மண்டலம்.. கொதிக்கும் கங்குவா பட ஒளிப்பதிவாளர்
திருப்பூர்: அமைதியான ஊர் என பெயர் பெற்ற கொங்கு மண்டலத்தில் சமீபகாலமாக கொலைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. வயதான நபர்களை குறிவைப்பது, ரவுடிசம், முன்விரோதம் என்று பல்வேறு காரணங்களுக்காக கொலைகள் அதிகரிக்கின்றன. இந்நிலையில் பல்லடத்தில் ஒரே குடும்பத்தில் 3 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடத்தவுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே சேமலைக் கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி. இவரின் மனைவி அலமேலு. இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இருவரும் திருமணமாகி, மகன் கோவையிலும், மகள் சென்னிமலையிலும் வசித்து வந்தனர். தெய்வசிகாமணி - அலமேலு விவசாயம் செய்து வந்தனர்.

உறவினரின் நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொள்வதற்காக செந்தில் குமார் நேற்று முன்தினம் சேமலைக் கவுண்டம்பாளையம் சென்று அப்பா, அம்மாவுடன் தங்கியிருந்தார். இரவு வழக்கத்துக்கு மாறாக நாய்கள் தொடர்ந்து குரைத்துள்ளன. இதனால் தெய்வசிகாமணி, வெளியே வந்து பார்த்துள்ளார்.
அப்போது அங்கே மறைந்திருந்த மர்ம நபர்கள் தெய்வசிகாமணியை வெட்டி கொலை செய்துள்ளனர். பிறகு வீட்டுக்குள் சென்ற மர்ம நபர்கள் தூங்கிக் கொண்டிருந்த அலமேலு மற்றும் செந்தில் குமாரையும் கொடூர ஆயுதங்களில் தாக்கி கொலை செய்துள்ளனர். அதிகாலை அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோதுதான் அவர்கள் மூன்று பேரும் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுகுறித்து அவிநாசிபாளையம் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. ஏழு தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எதிர்க்கட்சிகளும், பொது மக்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து ஏர்முனை இளைஞர் அணி தலைவரும், சமீபத்தில் வெளியான கங்குவா திரைபடத்தின் ஒளிப்பாதிவாளருமான வெற்றி கூறுகையில், "அலகுமலை அருகே சேமலைக் கவுண்டம்பாளையத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல கடந்தாண்டு பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தில், நான்கு பேர் கொலை செய்யப்பட்டனர்.
அந்த சம்பவத்தின் வடு ஆறுவதற்கு முன்பே இந்த சம்பவம், இப்பகுதி மக்கள் மனதில் பெரும் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. இதுபோல் தொடர்ந்து நடைபெறும் சம்பவங்கள் இந்த ஆட்சியில் குற்றவாளிகளுக்கு சிறிதும் பயமில்லையோ என எண்ணும் வகையில் உள்ளது. அமைதியான வாழ்க்கை வாழும் கொங்கு மண்டல பகுதி மக்கள் மனதில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில், தொடர்புடைய நபர்களைக் கண்டறிந்து விரைவான, கடுமையான நடவடிக்கை எடுத்து சட்டம் ஒழுங்கு காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சட்டம் ஒழுங்கை காக்க தவறும் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், வருகிற 3.12.2024 செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பில் திருப்பூர் மாவட்டம், அவிநாசிபாளையத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்." என்று அறிவித்துள்ளார்.
இதனால் வரும் நாள்களில் இந்த விவகாரம் மேலும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட இரண்டு நாட்களாகியும் இந்த சம்பவத்தில் தற்போது வரை ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications