தமிழகம் வரும் பிரதமர்.. மோடியின் பயண திட்டம் என்ன? முழு வீச்சில் ஏற்பாடுகள்.. இதுதான் டாப்பாமே!
திருப்பூர்: பிரதமர் மோடி 2 நாள் பயணமாக தமிழ்நாடு வருகை தர உள்ளார். பிரதமர் மோடி திருப்பூர் பல்லடம் அருகே பங்கேற்கும் பாஜக பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நடத்தி வரும் என் மண் என் மக்கள் யாத்திரையின் இறுதி நிகழ்வு வரும் 27-ம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள மாதப்பூரில் நடக்கிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். பிப்ரவரி 27, 28ஆம் தேதிகளில் 2 நாட்கள் தமிழகத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

இதுவரை தமிழ்நாட்டில் நடைபெற்றதிலேயே: பிரதமர் பங்கேற்றுப் பேசும் இந்தப் பொதுக் கூட்டம் பிரமாண்டமான முறையில் நடைபெற உள்ளது. இந்தப் பொதுக் கூட்டத்திற்காக பல்லடம் அருகே மாதப்பூர் கிராமத்தில் 1000 ஏக்கர் பரப்பளவில் மைதானத்தைத் தயார்படுத்தும் பணியில் பாஜகவினர் ஈடுபட்டுள்ளனர். இந்தக் கூட்டத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் பாஜக இதுவரை நடத்தியுள்ளதிலேயே மிகப்பெரிய பொதுக்கூட்டமாக இது இருக்கும் என்று பாஜகவினர் தெரிவிக்கின்றனர்.
பிப்ரவரி 27ஆம் தேதி மதியம் கோவை சூலூர் விமான நிலையத்திற்கு வரும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பல்லடம் செல்வார். மதியம் 2.45 மணியளவில் மாதப்பூர் வந்தடையும் அவர், ஒரு மணிநேரம் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பார். இந்தப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி சிறப்புரை ஆற்றுவார்.

2 நாட்கள் தமிழ்நாட்டில்: அதன் பிறகு அங்கிருந்து மதுரைக்குப் புறப்படுவார் பிரதமர் மோடி. மதுரையில் உள்ள டி.வி.எஸ் லட்சுமி பள்ளியில் 'டிஜிட்டல் மொபிலிட்டி இனிஷியேட்டிவ் ஃபார் ஆட்டோமோட்டிவ் எம்.எஸ்.எம்.இ.’ என்ற தலைப்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். அன்று இரவு மதுரையில் தங்குகிறார் பிரதமர் மோடி. அப்போது, தமிழக பாஜக நிர்வாகிகளை சந்திக்க உள்ளதாகத் தெரிகிறது.
மறுநாள், அதாவது பிப்ரவரி 28ஆம் தேதி, காலை தூத்துக்குடிக்குச் சென்று பல்வேறு திட்டப்பணிகளை அடிக்கல் நாட்டி துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி. அங்கிருந்து நெல்லை செல்லும் பிரதமர் மோடி அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு, கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்குச் செல்ல உள்ளார்.
பொதுக்கூட்டம் நடைபெற உள்ள பல்லடம் அருகே உள்ள மடப்பூர் பகுதியில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான மைதானத்தை சுத்தப்படுத்தும் பணிகளும் விழா மேடை அமைக்கும் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வரும் தொண்டர்களுக்கு உணவு ஏற்பாடு செய்வதற்கான கூடங்கள் அமைக்கும் பணிகளும் மாநாட்டிற்கு வருபவர்களை வரவேற்கும் விதமாக கொடிக்கம்பங்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. பொதுக்கூட்ட பணிகளை அண்மையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பார்வையிட்டார்.
பிரதமர் நரேந்திர மோடி சூலூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பல்லடம் வரவுள்ளதை தொடர்ந்து மாநாட்டு திடலுக்கு அருகிலேயே ஹெலிபேட் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. மேலும் பிப்ரவரி 27 ஆம் தேதி பிரதமர் மோடி வருகையையொட்டி பாதுகாப்பு பணிக்காக சுமார் 6000 முதல் 10000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications