திருப்பூர் பெண் கொலை வழக்கில் 3 பேர் கைது... 12 மணி நேரத்தில் குற்றவாளிகளை பிடித்து அசத்திய போலீஸ்!
திருப்பூர் : திருப்பூர் அருகே மூதாட்டியை கொன்று கொள்ளையடித்த மூன்று பேர் கொண்ட கும்பலை, துரிதகதியில் செயல்பட்டு 12 மணி நேரத்தில் பிடித்த தனிப்படை போலீசாருக்கு, காவல் ஆணையாளர் பிரபாகரன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
Recommended Video
திருப்பூர் 15 வேலம்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோளிபாளையம் சீனிவாசா நகர் பகுதியில், கோபாலன் - முத்துலட்சுமி என்ற வயதான தம்பதியர் வசித்து வருகின்றர். இவர்களது இரண்டு மகன்களுக்கும் திருமணம் ஆகி தனித்தனியே வசித்து வருகின்றனர். கோபாலன் தன்னுடைய பனியன் கம்பெனிக்கு காலையில் சென்று விட்டு, மாலையில் வீடு திரும்புவது வழக்கம்.
30 வருட கொலை வழக்கில் தேடப்பட்டவர் கைது - ஹரியாணாவில் நடிகனாக வாழ்ந்த முதியவர்
தூக்கில் தொங்கியபடி பெண் சடலம்
இந்நிலையில், நேற்று பணிக்கு சென்று விட்டு மீண்டும் மாலை வீட்டுக்கு சென்ற கோபாலன், வீடு வெளிப்பக்கமாக தாளிடப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, முத்துலட்சுமி தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்துள்ளார். மேலும், வீட்டில் பல இடங்களில் மிளகாய் பொடி தூவப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கோபாலன், உடனடியாக வேலம்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் முதற்கட்ட விசாரணை
இதுகுறித்த தகவலின்பேரில் விரைந்து வந்த போலீசார், முத்துலட்சுமி உடலை கைப்பற்றினர். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், வீட்டில் வைத்திருந்த 10 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 41.5 சவரன் நகை கொள்ளை போனது தெரியவந்தது. இதனை அடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை பதிவுகள் சேகரிக்கப்பட்டன. மேலும், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தேடப்பட்டதில் குற்றவாளிகள் சென்ற திசை போலீசாருக்கு தெரிய வந்தது.
3 தனிப்படைகள் அமைத்து விசாரணை
இதனையடுத்து, திருப்பூர் மாநகர காவல் ஆணையாளர் பிரபாகரன் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்து, 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் கோபாலன் வீட்டில் குடியிருந்த குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் இவர்கள் வீட்டிற்கு அவ்வப்பொழுது வந்து செல்லும் நபர்கள் குறித்தும் விசாரித்னர். குறிப்பிட்ட நேரத்தில் அந்தப் பகுதியில் பயன்படுத்தப்பட்ட செல்ஃபோன் சேவைகளை ஆய்வு செய்ததில், அந்த வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் பிளம்பர் அருண்குமார் அங்கு இருந்தது தெரியவந்தது.
குற்றவாளிகளை பிடித்த போலீசார்
இதனை அடுத்து அவரது எண்ணை ஆராய்ந்து பார்த்தபோது கொடுமுடியில் அவர் தங்கி இருப்பது தெரிய வந்தது. உடனடியாக விரைந்து சென்ற அடிப்படை போலீசார், கொடுமுடி தனியார் லாட்ஜில் தங்கி இருந்த அருண்குமார், தினேஷ் குமார், அமரன் என்ற மூன்று பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 10 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் 41.5 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
திட்டமிட்டு கொலை செய்த கும்பல்
மூவரையும் திருப்பூர் அழைத்து வந்த தனிப்படை போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அருண்குமார் கோபாலன் வீட்டிற்கு தொடர்ந்து பிளம்பிங் வேலை செய்ய செய்து வந்தது தெரியவந்தது. இவருடன் அமரன் என்பவரும் பணிக்கு சென்று வந்துள்ளார். கோபாலன் சொத்து ஒன்று விற்பனை செய்து, வீட்டில் பணம் வைத்திருப்பதாக கணவன் மனைவி பேசியதை இவர்கள் ஒட்டுக் கேட்டுள்ளனர். மேலும் மதிய நேரத்தில் முத்துலட்சுமி மட்டும் தனியாக இருப்பதையும் அறிந்த இவர்கள், தினேஷ்குமார் என்ற நபரை கூட்டு சேர்ந்து, முத்துலட்சுமி கழுத்தை நெறித்து கொலை செய்தது அம்பலமானது. மேலும், வீட்டில் இருந்த பொருட்களையும் இந்தக் கும்பல் கொள்ளை அடித்துச் சென்றது தெரியவந்தது.
குற்றத்தை மறைக்க மிளகாய் பொடி தூவல்
தங்களை பிடிக்கக் கூடாது என்பதற்காக, இந்த கும்பல், வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவி உள்ளது. மேலும், முத்துலட்சுமி தற்கொலை செய்து கொண்டது போல தோற்றமளிக்கும் வகையில், அவரை தூக்கில் தொங்கவிட்டு சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.
பாராட்டு மழையில் தனிப்படை போலீசார்
கொலை நடந்த நேரத்தில் குற்றவாளிகளை பிடித்த தனிப்படை போலீசாருக்கு, காவல் ஆணையாளர் பிரபாகரன் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையை, அப்பகுதி மக்களும் பாராட்டி வருகின்றனர்.