திருப்பூர் எஸ்எஸ்ஐ கொலை சம்பவம்.. முக்கிய குற்றவாளி என்கவுன்ட்ரில் சுட்டுக் கொலை! பரபர பின்னணி
திருப்பூர்: திருப்பூரில் விசாரணைக்குச் சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேலை வெட்டிக் கொன்ற கொலையாளி மணிகண்டன் என்கவுன்ட்டரில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கைது செய்யும் போது சரவணக்குமார் என்ற போலீஸ்காரரை தாக்கிவிட்டு மணிகண்டன் தப்ப முயலவே போலீஸ் சுட்டதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை அருகே உள்ள குடிமங்கலம் பகுதியில் மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பவரும், அவரது மகன்கள் தங்கபாண்டியன், இளைய மகன் மணிகண்டன் என்பவர்களும் குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வருகின்றனர்.
மூன்று பேரும் நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் தங்கபாண்டி, மணிகண்டன் சேர்ந்து தனது தந்தை மூர்த்தியை கடுமையாக தாக்கியுள்ளனர். இது குறித்து அருகில் இருந்தவர்கள் காவல் அவசர உதவி எண் 100க்கு அழைத்து தகவல் தெரிவித்துள்ளனர்.

சிறப்பு சார்பு ஆய்வாளர்
இதனை தொடர்ந்து குடிமங்கலம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் அந்தப் பகுதி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்ததால் அவருக்கு முதல் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற உதவி ஆய்வாளர் சண்முகவேல் தந்தை மகன் சண்டையை சமாதானம் செய்ய முயன்றுள்ளர். போலிஸ் வந்ததை பார்த்த மணிகண்டன் தோட்டத்தில் சென்று பதுங்கி கொண்டார்.
காவல்துறை
காயமடைந்த மூர்த்தியை ஆம்புலன்சில் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்துள்ளார். மேலும் மூர்த்தி தங்கபாண்டி புகைப்படங்களை எடுத்து காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். இருவரிடமும் சாதாரணமாக பேசிக் கொண்டிருந்த போது மறைந்திருந்த மணிகண்டன் உதவி ஆய்வாளரை வெட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சண்முகவேல் தப்பிக்க முயன்று ஓடி உள்ளார். ஆத்திரத்தில் இருந்த தங்கபாண்டியும் தந்தை மூர்த்தியும் துரத்தி சென்றுள்ளனர்.
கொடூரமாகக் கொலை
போதையில் இருந்த 3 பேரும் சேர்ந்து உதவி ஆய்வாளரை வெட்டி கொலை செய்தனர். உடன் இருந்த ஓட்டுனரையும் துரத்திச் சென்றுள்ளனர். அவர் ஓடி தப்பி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். விரைந்து வந்த குடிமங்கலம் போலீசார் தப்பிச் சென்ற தந்தை மூர்த்தி மகன்கள் தங்கபாண்டி, மணிகண்டன் என மூன்று பேரையும் தேடி வருகின்றனர். சம்பவம் குறித்து 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தனிப்படை
தமிழ்நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் உயிரிழந்த சண்முகவேல் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதி உதவி அளிக்கப்பட்டிருக்கிறது. குற்றவாளிகளை கைது செய்ய திருப்பூர் காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
என்கவுன்டர்
இந்த நிலையில், வழக்கில் தேடப்பட்டு வந்த மூர்த்தி தங்கப்பாண்டி ஆகியோர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். இந்த நிலையில் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான மணிகண்டனை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் மணிகண்டன் பதுங்கி இருக்கும் தகவல் தெரிந்து அங்கு போலீசார் சென்றனர். தொடர்ந்து அவரை கைது செய்து, ஆயுதங்களை வைத்திருந்த இடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது சரவணகுமார் என்ற போலீஸ்காரரை தாக்கிவிட்டு மணிகண்டன் தப்ப முயன்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தற்காப்புக்காக போலீசார் சுட்டதில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், காயமடைந்த சரவணகுமார் சிகிச்சை பெற்று வருகிறார்.












Click it and Unblock the Notifications