200 ரூபாய் டிக்கெட், கூடவே சில்லி சிக்கன்..ஓட்டலில் ஜெய் பீம் திரையிட முயற்சி.. அவிநாசியில் பரபரப்பு
திருப்பூர்: அவினாசி பகுதியில் அமைந்துள்ள தாபா ஓட்டல்களில் ஜெய் பீம் திரைப்படத்தை சூர்யா ரசிகர்கள் திரையிட முயன்ற சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திரைப்பட ஒளிப்பதிவு சட்டப்படி திரையரங்கு தவிர்த்துப் பிற இடங்களில் ஒளிபரப்பக் கூடாது என்பதால் போலீசார் ஜெய் பீம் படம் திரையிடப்படுவதைத் தடுத்து நிறுத்தினர்.
ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ஜெய் பீம். இந்தப் படம் திரையரங்குகளைத் தவிர்த்துவிட்டு நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பாக நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஜெய் பீம் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

ஜெய் பீம்
அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள இந்தத் திரைப்படத்தைப் பலரும் பாராட்டி வருகின்றனர். இதில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்களின் உணர்வுகளையும் ஜாதி வெறியால் அவர்கள் மீது கட்டவிழுத்துவிடப்படும் வன்முறையும் இந்தப் படம் அப்படியே ரத்தமும் சதையுமாகக் காட்சிப்படுத்தியுள்ளது. ஜெய் பீம் திரைப்படத்தைப் பார்த்த பிறகு இரவு முழுவதும் மனம் கனத்து விட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஹோட்டல்
இந்நிலையில், ஓடிடி தளத்தில் வெளியான இந்தத் திரைப்படத்தைத் திருப்பூர் அவினாசியில் உள்ள தாபா ஓட்டல் ஒன்றில் நேற்று இரவு திரையிட முயன்றனர். இதற்காக ஒவ்வொருவரிடம் 200 ரூபாயை வசூலித்துள்ளனர். மேலும், இடைவெளியின் போது டிக்கெட் வாங்கியவர்களுக்குக் காபி, டீ மற்றும் சில்லி சிக்கன் வழங்கப்படும் என்றும் அவர்கள் அறிவித்திருந்தனர். தமிழக அரசின் திரைப்பட ஒளிப்பதிவு சட்டப்படி உரிமம் பெற்ற திரையரங்கு தவிர்த்துப் பிற இடங்களில் ஒளிபரப்பக் கூடாது.

போலீசார் நடவடிக்கை
இது குறித்து போலீசாரிடமும் புகார் அளிக்கப்பட்டது. தமிழக அரசின் திரைப்பட ஒளிப்பதிவு சட்டப்படி சென்சார் செய்யப்பட்ட திரைப்படங்கள் திரையரங்குகளில் மட்டுமே திரையிடப்பட வேண்டும் என்ற விதி உள்ளதை உணவக உரிமையாளரிடம் சுட்டிக்காட்டி போலீசார் ஜெய் பீம் படம் திரையிடப்படுவதைத் தடுத்து நிறுத்தினர். மேலும், தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில்,11 மணிக்கு மேல் கடைகளைத் திறந்து வைக்கக் கூடாது என்பதால் கடைகளை மூடவும் அறிவுறுத்தினர்.

புகார்
சூர்யா ரசிகர்களால் பிரச்சினை ஏற்படாமல் இருக்க அங்குக் காவலர்களும் குவிக்கப்பட்டனர். ஓ.டி.டி-இல் வெளியாகும் படங்களை பொது வெளியில் திரையிட அனுமதி இல்லாத நிலையில், இது போன்ற செயல்கள் திரையரங்குகளைக் கடுமையாகப் பாதிக்கும் எனத் தமிழக முதல்வருக்குத் தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் புகார் மனு அனுப்பி உள்ளனர்.












Click it and Unblock the Notifications