மனிதனை மனிதனாக பார்க்க வேண்டும் என்பதுதான் சனாதனம்.. திமுக எப்போதுமே இந்துக்களின் எதிரி: அண்ணாமலை
திருப்பூர்: "மனிதனை மனிதனாகப் பார்க்க வேண்டும் என்பதுதான் சனாதனம். ஆனால், தனது குடும்பத்தினர் நலனை மட்டும் பார்ப்பது திமுக. திமுக எப்போதுமே இந்துக்களின், இந்து தர்மத்தின் எதிரி. பாஜகவைப் பொறுத்தவரை அனைவரும் சமம்." என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
"என் மண், என் மக்கள்" என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திருப்பூர் மாவட்டத்தில் மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்து வருகிறார். தாராபுரம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நேற்று இரவு பாதயாத்திரை மேற்கொண்டு மக்கள் மத்தியில் பேசினார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை. அப்போது, திமுக அரசை கடுமையாக விமர்சித்தார் அண்ணாமலை. மகளிருக்கு ரூ.1000 உரிமைத்தொகையை நாடாளுமன்ற தேர்தல் வரை தான் வழங்குவார்கள் என விமர்சித்துள்ளார் அண்ணாமலை.

அண்ணாமலை பேசுகையில், "பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மீதோ, அவரது அமைச்சரவையில் இருக்கும் 78 அமைச்சர்கள் மீதோ ஊழல் குற்றச்சாட்டு வைக்க முடியாது. பிரதமர் மீது ஊழல் குற்றச்சாடு வைத்தால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆனால், திமுக காங்கிரஸ் கூட்டணியான இந்தி கூட்டணியின் சாதனை, யாருமே செய்யாத அளவுக்கு ஊழல் செய்ததுதான். எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்ற ஊழல் கட்சிகள் அனைத்தும் இணைந்து, தங்கள் குடும்பத்தினர் அதிகாரத்துக்கு வருவதற்காகவே கூட்டணி அமைத்திருக்கிறார்கள். திமுக காங்கிரஸ் உள்ளிட்ட 28 ஊழல் கட்சிகள் இணைந்து. ஊழலற்ற ஏழை மக்களுக்கான, நேர்மையான ஆட்சி தரும் நமது பிரதமர் மோடி அவர்களை எதிர்க்கிறார்கள்.
பாரதப் பிரதமரின் ஜல் ஜீவன் திட்டம் மூலம் குடிநீர் வசதி பெற்ற திருமதி. சாந்தா, நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம் மூலம் பயனடைந்த விவசாயி திரு.பூரண பிரபாகரன், தேசிய கல்வி உதவித்தொகைத் திட்டம் மூலம் கல்லூரியில் சேர்ந்து பயிலும் மாணவி செல்வி. ரூபதர்ஷினி, சாலையோர சிறு வணிகர்களுக்கான சுவ நிதித் திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ள திருமதி இராதா, பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் மூலம் வீடு பெற்ற திருமதி. விஜயா,பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டம் மூலம் பயனடைந்த தென்னை விவசாயி திரு செல்வராஜ், ஆயுஷ்மான் பாரத் மருத்துவ திட்டம் மூலம் மருத்துவக் காப்பீடு பெற்று பயனடைந்த விவசாயி திரு கணேசன். இவர்கள்தான் மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்களின் முகவரி.
ஒரு குடும்பம், ஒரே குடும்பம், ஒரே ஒரு குடும்பம். மகனுக்கும் மருமகனுக்கும் திமுக ஆட்சி.
தமிழகத்தில், சாராயத்தினால், நம் கண் முன்னால் சமூகம் பாழாகிக் கொண்டிருக்கிறது. அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அவர்களை மக்கள் முற்றுகையிட்டு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று போராடிய பிறகும், திமுக டாஸ்மாக் கடைகளை மூடவில்லை. ஒரு ஆண்டில், டாஸ்மாக்கில் மட்டும் 22% வருமானம் உயர்வு. 44 ஆயிரம் கோடி டாஸ்மாக் வருமானம். டாஸ்மாக் கடைகளுக்கு சாராயம் விற்பனை செய்வது, திமுகவினர்தான். திமுகவுக்கு அவர்கள் வருமானம் தான் முக்கியம். மக்களைப் பற்றிய கவலை இல்லை.
டாஸ்மாக் கடைகளை மூட தமிழ்நாடு பாஜக சார்பாக வெள்ளை அறிக்கை சமர்ப்பித்தோம். கள்ளுக்கடைகளை திறப்பதன் மூலம், சாராயத்தின் ரசாயனத்தில் இருந்து இயற்கையை நோக்கி திரும்பும் வாய்ப்பு மக்களுக்குக் கிடைக்கும். தென்னை பனை மரம் வாயிலாக கிடைக்கும் 138 பொருள்கள் மூலம், ஒரு லட்சம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும். படிப்படியாக டாஸ்மாக் கடைகளை மூட முடியும் என்று வெள்ளை அறிக்கையில் தெளிவாகக் கூறியிருந்தோம். ஆனால் திமுக தனது கட்சிக்கு வரும் வருமானத்தை விட்டுவிட்டு, டாஸ்மாக் கடைகளை மூடாது.
திமுக ஆட்சியில், லஞ்சம் ஊழல், ஜாதியப் படுகொலைகள் - 8 மாதத்தில் 1021 கொலைகள். சட்டம் ஒழுங்கு சீர்கேடு என, பொதுமக்கள் பாதுகாப்பே கேள்விக்குறியாகியிருக்கிறது. மக்களை இணைக்க பாஜக முயற்சிக்கிறது. ஆனால், மக்களைப் பிரிக்க திமுக முயற்சிக்கிறது. அதன் பொருட்டுதான் அவர்களின் சனாதன எதிர்ப்பு. நமது கோவில்கள் சனாதன தர்மத்தின் சின்னங்கள். மனிதனை மனிதனாகப் பார்க்க வேண்டும் என்பதுதான் சனாதனம். ஆனால், தனது குடும்பத்தினர் நலனை மட்டும் பார்ப்பது திமுக. திமுக எப்போதுமே இந்துக்களின், இந்து தர்மத்தின் எதிரி. பாஜகவைப் பொறுத்தவரை அனைவரும் சமம். பாஜக ஆட்சி, அனைத்து சமுதாயத்தினரையும் அரவணைத்துச் செல்லும் ஆட்சியாக இருக்கும்.
திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், சனாதன எதிர்ப்பு என்ற பெயரில் திசைதிருப்பிக் கொண்டிருக்கிறது. இந்திய அளவில், கடன் வாங்குவதில் நம்பர் ஒன் மாநிலமாக மாற்றி இருக்கிறார்கள். கடன் வாங்குவதில், மூன்றாவது இடத்தில் இருந்து, முதல் இடத்திற்கு வந்திருக்கிறது தமிழகம். ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் 3.5 லட்சம் கடன் இருக்கிறது. மகளிர் உரிமைத் தொகை அனைவருக்கும் என்று சொல்லிவிட்டு, 60% பெண்களுக்குக் கொடுக்காமல் புறக்கணித்துள்ளார்கள். கடந்த ஆண்டு, பட்டியல் சமூக நலனுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 10,000 கோடியை திருப்பி அனுப்பிய திமுக, தற்போது, பட்டியல் சமூக மக்களுக்காக ஒதுக்கப்பட்ட 2000 கோடி நிதியை மடைமாற்றியிருக்கிறார்கள்.
நாடாளுமன்றத் தேர்தல் வரைதான் மகளிர் உரிமைத் தொகை கொடுத்து மக்களை ஏமாற்றுவார்கள். திமுக ஆட்சியில், வளர்ச்சித் திட்டங்கள், வேலை வாய்ப்பு,மகளிர் மேம்பாடு திட்டங்கள் எதுவும் இல்லை. 3.5 லட்சம் அரசு வேலை வாய்ப்பு கொடுப்போம் என்று சொல்லிவிட்டு, இளைஞர்களை வஞ்சித்து வருகிறார்கள். தமிழக அரசுப் பணிகளுக்கான தேர்வுகளை நடத்தாமலும், தேர்வு முடிவுகளை குறித்த நேரத்தில் வெளியிடாமலும் முறைகேடு செய்கிறார்கள். அரசுப் பணி தேர்வாணையத்துக்கு தலைவரையே நியமிக்காமல் இருக்கிறார்கள். கஞ்சா, டாஸ்மாக் எல்லாம் தற்போது வீடு வரை வந்துவிட்டது. போதையின் பிடியில் கொலைகள் நடக்கின்றன. பொதுமக்கள் யாருக்கும் பாதுகாப்பில்லை.
திமுக தனது குடும்பம் அதிகாரத்தில் இருக்கத்தான் ஆட்சி நடத்துகிறதே தவிர மக்களுக்கான ஆட்சி இல்லை. மக்கள் கோபம் அவர்கள் மீது திரும்பும்போது, இந்தித் திணிப்பு என்று பொய் சொல்லுவார்கள். மோடி அவர்கள் தமிழை உலகம் முழுவதும் கொண்டு செல்கிறார். பாராளுமன்றத்தில் தமிழர்களின் செங்கோல் அலங்கரிக்கிறது. திமுக தமிழுக்குச் செய்தது என்ன? வரும் பாராளுமன்ற தேர்தலில், மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்கள் மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்க, தமிழகம் இந்த முறை துணையிருக்கும். ஊழல் குடும்ப திமுக காங்கிரஸ் கூட்டணி, மக்களால் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்படும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை." எனப் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications