செங்கோட்டையன் உறவினருக்கு எல்லாம் சீட் இல்லை.. கடுகடுத்த எடப்பாடி.. அப்செட்டில் அதிமுக எம்எல்ஏ
திருப்பூர்: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் செங்கோட்டையின் உறவினர் என்பதற்காகவே, மடத்துக்குளம் சிட்டிங் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சீட் கொடுக்க. எடப்பாடி பழனிசாமி மறுத்துள்ளார். இது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக வேட்பாளர் பட்டியல் மூன்று கட்டங்களாக வெளியாகியுள்ளது. இதில் பெரும்பாலும் சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒரு சில சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு தான் சீட் வழங்கப்படவில்லை. அந்த வகையில் மடத்துக்குளம் சிட்டிங் அதிமுக எம்எல்ஏ சி. மகேந்திரனுக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக மடத்துக்குளம் தொகுதி அமமுக.விற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் சண்முகவேலு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மடத்துக்குளம் சிட்டிங் எம்எல்ஏ
அதிமுக தலைமையின் இந்த முடிவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்த மகேந்திரன் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் தீவிர ஆதரவாளராவார். கடந்த 2014-2019 காலகட்டத்தில் பொள்ளாச்சி தொகுதியின் எம்பியாக இருந்தார். ஆக்டிவாக பணியாற்றியதால் 2019 நாடாளுமன்ற தேர்தலில் பொள்ளாச்சி தொகுதி அதிமுக வேட்பாளராக மகேந்திரன் களமிறங்கினார்.
அந்த தேர்தலில் தோல்வியடைந்தார். அதன் பிறகு நடைபெற்ற 2021 சட்டமன்ற தேர்தலில் மகேந்திரன் மடத்துக்குளம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். அதிமுக திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளராகவும் உள்ளார். சிட்டிங் எம்எல்ஏ, மாவட்டச் செயலாளர், வேலுமணியின் குட்புக்கில் இருப்பவர் என்று மகேந்திரனுக்கு எல்லாமே பாசிட்டிவாக தான் சென்றது. ஒருவேளை அதிமுக ஆட்சி வந்தால் அவர் அமைச்சரானாலும் ஆச்சர்யமில்லை என்ற நிலை நிலவியது.
செங்கோட்டையனின் உறவினர்
மடத்துக்குளம் அமமுகவுக்கு மாற்றப்பட்டாலும் மகேந்திரனுக்கு வேறு ஏதாவது தொகுதி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது அவருக்கு சீட் வழங்காதது மகேந்திரனின் ஆதரவாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிமுகவினர் கூறுகையில், "மகேந்திரனுக்கு சீட் வழங்காததன் பின்னணியில் கே.ஏ செங்கோட்டையன் தான் முக்கிய காரணம்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக செங்கோட்டையன் கடந்த வருடம் அதிமுகவில் இருந்து விலகினார். பிறகு அவர் விஜய்யின் தவெகவில் இணைந்துள்ளார். செங்கோட்டையனுடன் தொடர்பில் இருந்த அனைத்து நிர்வாகிகளையும் எடப்பாடி பழனிசாமி கட்சியை விட்டு நீக்கினார். மகேந்திரன் செங்கோட்டையனின் உறவினர் ஆவார்.
எடப்பாடி பழனிசாமி வியூகம்
செங்கோட்டையன் பேரன் மிதிலேஷ் மற்றும் மகேந்திரன் மகள் விதுபிரதிக்ஷா தம்பதிக்கு கடந்த 2024 ஆம் வருடம் திருமணம் நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைத்து அதிமுக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். செங்கோட்டையனுடனான மோதலை எடப்பாடி தன்னுடைய கௌரவ பிரச்சனையாகவே பார்க்கிறார். கோபியில் செங்கோட்டையனை தோற்கடிக்க வியூகம் வகுக்கிறார்.
மேலும், செங்கோட்டையனின் ஆதரவாளர்கள், வேண்டப்பட்டவர்களையும் கட்டம் கட்டி தூக்கி வருகிறார். மகேந்திரன் வேலுமணி ஆதரவாளராக இருந்தாலும், செங்கோட்டையனின் நெருங்கிய உறவினர் என்பதால் அவர் மூலம் தனக்கு சிக்கல் கொடுத்து விடுவாரோ என்ற எண்ணம் எடப்பாடி பழனிசாமிக்கு இருந்தது. அதனால் தான் செங்கோட்டையனுக்கு, குடும்ப ரீதியாக நெருக்கடி, மன உளைச்சல் தருவதற்காக மகேந்திரனுக்கு சீட் வழங்கவில்லை. மகேந்திரனின் ஆதரவாளர்கள் மடத்துக்குளத்தில் தேர்தல் பணியாற்றுவது சந்தேகம் தான்" என்றனர்.












Click it and Unblock the Notifications