தமிழக அரசு மீது புகார்.. அரசு ஆசிரியர்கள் “ஸ்ட்ரைக்” அறிவிப்பு - 1 லட்சம் பேராம்! பள்ளிகள் இயங்குமா?
திருப்பூர்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்டு 4 ஆம் தேதி அரசு பள்ளி ஆசிரியர்களும், 5 ஆம் தேதி ஜாக்டோ ஜியோ அமைப்பினரும் தொடர் போராட்டங்களை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தனியார் மஹாலில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் முப்பெரும் விழா நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட அமைப்பின் அகில இந்திய செயலாளர் அண்ணாமலை பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

கோரிக்கைகள்
அப்போது பேசிய அவர், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்று 15 மாதம் நிறைவடைய உள்ளது. தேர்தல் காலத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு அளித்த எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. உத்தரவாதத்தை கூட சட்டமன்றத்தில் கூறவில்லை. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்று கூறியதும் நிறைவேற்றப்படவில்லை.

அகவிலைப்படி உயர்வு
விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. 1 லட்சம் ஊதியம் பெறுவோருக்கு 6 மாதத்திற்கு ஒருமுறை வழங்கப்படும் என்று நிதியமைச்சர் தெரிவிக்கிறார். எம்ஜிஆர், கருணாநிதி ஆகியோர் போல் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி கொடுக்க முடியாத சூழ்நிலையை மு.க.ஸ்டாலின் ஏற்படுத்துவதாக தெரிகிறது.

ஆர்ப்பாட்டம்
இதனை கண்டித்தும், தொடக்கப் பள்ளிகளில் ஒன்று, இரண்டு, மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரே ஆசிரியர் பாடம் எடுக்கும் நிலையில், சுமார் 14,000 காலியிடங்களை உடனடியாக நிரப்பி ஆசிரியர்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் ஆசிரியர் கூட்டணி சார்பாக வரும் 4 ம் தேதி மாலை தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த உள்ளோம்.

ஒரு லட்சம் ஆசிரியர்கள்
சுமார் ஒரு லட்சம் ஆசிரியர்கள் இந்த மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டத்தில் கலந்துகொள்ள உள்ளனர். இதனை வரும் தொடர்ந்து ஐந்தாம் தேதி ஜாக்டோ ஜியோ அமைப்பினரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். அதன் பிறகும் முதலமைச்சர் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம்." என்றும் அவர் எச்சரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications