திருப்பூர் டூ நொய்டா.. சொல்லிவச்ச மாதிரி நடக்குதே..!
ஈரான் - அமெரிக்கா மோதல் காரணமாக இந்தியாவின் டெக்ஸ்டைல் மற்றும் ஆடை உற்பத்தித் துறை கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறது. திருப்பூர் முதல் நொய்டா வரையில் உள்ள ஆடை உற்பத்தி நிறுவனங்கள் அடுக்கடுக்கான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 15 நாள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உடனடி நிவாரணம் கிடைக்கும் என்பது, இன்னும் உறுதி இல்லை.
இதேபோல் போர் நிறுத்தப்பட்ட 15 நாட்களுக்கு பின்பு மீண்டும் போர் துவங்கினால் கூடுதல் பாதிப்பு ஏற்படும் என்பதால் இத்துறையினர் பெரும் சோகத்தில் உள்ளனர்.

நொய்டா சந்தை
நொய்டாவில் உள்ள ஒரு ஆடை உற்பத்தி நிறுவனம் ஐரோப்பிய பிராண்டுகளுக்கு ஆடைகளை தயாரித்து வழங்கி வருகிறது. சமையல் எரிவாயு பற்றாக்குறை மற்றும் விலைவாசி அதிகரிப்பு காரணமாக 10 முதல் 12 சதவீத தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர். ஆடை உற்பத்தியில் 40 சதவீதம் பயன்படுத்தப்படும் பாலி எத்திலீன் டெரெப்தாலேட் (PET) பொருளின் விலை உயர்ந்துள்ளது.
ஏற்றுமதி பாதிப்பு
இந்திய ஆடை ஏற்றுமதியில் 11 சதவீதம் UAE, சவுதி அரேபியா, இஸ்ரேல் போன்ற மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்கிறது. இந்தப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக ஆர்டர்கள் ஏற்றுமதி மற்றும் பணப் பரிவர்த்தனை சுழற்சி பாதிக்கப்பட்டுள்ளது.
எரிவாயு பற்றாக்குறை
நொய்டா தொழிற்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தொழில் மற்றும் வணிகப் பயனர்களுக்கு இயல்பாக கிடைக்கும் எரிவாயு சப்ளையில் 80 சதவீதம் மட்டுமே வழங்கப்படுகிறது. சமையல் எரிவாயு பற்றாக்குறை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதித்து, அவர்களை சொந்த ஊருக்கு திரும்பச் செல்ல வைத்துள்ளது மட்டும் அல்லாமல் தொழிற்சாலையில் உற்பத்தி அளவுகளும் குறைந்துள்ளது.
திருப்பூர் சந்தை
சர்வதேச அளவில் போர் மற்றும் நெருக்கடிகள் ஏற்படும் போது திருப்பூர் டெக்ஸ்டைல் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்படுவது வழக்கம். தற்போது ஈரான்-அமெரிக்கா இடையேயான போர் பதற்றம் காரணமாக சுற்றியுள்ள நாடுகளிலும் வர்த்தகம் மந்தமடைந்துள்ளது. இதனால் இந்தியாவின் ஒட்டுமொத்த இறக்குமதி - ஏற்றுமதி செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
ஏற்றுமதியாளர்கள் மட்டுமின்றி, உள்நாட்டு டெக்ஸ்டைல் உற்பத்தியாளர்களும் கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். டெக்ஸ்டைல் துறையில் முக்கியப் பங்கு வகிக்கும் ஜாப் ஒர்க் நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதோடு சாயம், ரசாயனப் பொருட்கள், விறகு மற்றும் நிலக்கரி விலை கடுமையாக உயர்ந்ததால், சாயமிடும் கட்டணம் மற்றும் பிற செயல்முறை கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
மேலும் பேக்கிங் மற்றும் பிராசசிங் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. தையல் நூல், ரப்பர் மற்றும் பாலியஸ்டர் நூல் இறக்குமதி பாதிக்கப்பட்டதால் அவற்றின் விலையும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக எலாஸ்டிக் உற்பத்தி கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி மூலப்பொருட்கள் முதல் பேக்கிங் செலவுகள் வரையில் ஈரான் போரால் விலை உயர்ந்துள்ளது.
இந்த விலை உயர்வுகளாலும் டெக்ஸ்டைல் உற்பத்தியின் மொத்த செலவும் அதிகரித்துள்ளது. இது ஏற்றுமதியாளர்கள் மற்றும் உள்நாட்டு உற்பத்தியாளர்களின் லாபத்தை பெரிதும் பாதித்து வருகிறது.
15 நாள் போர் நிறுத்தம்
இப்போது இரு நாடுகளுக்கும் இடையே 15 நாள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பு வெளியாகி 24 மணிநேரம் கூட ஆகாத நிலையில் விநியோகச் சங்கிலி, உள்ளீட்டுச் செலவு, தொழிலாளர் நிலைத்தன்மை ஆகியவற்றில் உடனடி மாற்றம் ஏற்படுமா என்றால் வாய்ப்புகள் குறைவு தான். முதலீட்டு சந்தை போல் உடனடி மாற்றம் விநியோக சந்தையில் நடக்காது.
இந்தியப் பொருளாதாரத்துக்கு இந்த நெருக்கடி பெரும் சவாலாக அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications