மணி அண்ணன்கள்.. இப்போ ‘நோ மணி’.. '65000 கோடி' செந்தில்பாலாஜியே முடிச்சு விட்ருவாரு - தினகரன் கிண்டல்!
திருப்பூர் : அதிமுக ஆட்சி காலத்திலேயே மணி அண்ணன்களிடம் சொன்னேன். அவர்கள் கேட்கவில்லை. இப்போது ரெய்டில் மாட்டிக்கொண்டு முழிக்கிறார்கள் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடந்தது குறித்துப் பேசியுள்ள தினகரன், வேலுமணி, தங்கமணியெல்லாம் இப்போ 'நோ' மணி ஆகிவிட்டனர் என விமர்சித்துள்ளார்.
மேலும், மீண்டும் திமுக ஆட்சி கவிழ்வதற்கு மின் கட்டண உயர்வு போதும் என்றும் திமுகவை செந்தில் பாலாஜியே முடித்துவிடுவார் என்றும் கூறியுள்ளார் டிடிவி தினகரன்.

செந்தில் பாலாஜியே முடிச்சிடுவாரு
திருப்பூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கோவை, ஈரோடு, நீலகிரி உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அ.ம.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "திமுகவை செந்தில் பாலாஜியே முடித்துவிடுவார். மீண்டும் திமுக ஆட்சி கவிழ்வதற்கு மின் கட்டண உயர்வு போதும்.

மின் கட்டண உயர்வு
கடந்த திமுக ஆட்சியில் தமிழக மக்கள் மின்வெட்டால் பாதிக்கப்பட்டனர். இந்த திமுக ஆட்சியில் மின் கட்டண உயர்வால் தொழில் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மின் கட்டணம் மக்களால் ஏற்கும் அளவிற்கு இருக்க வேண்டும். வாட்டி வதைக்கும் வகையில் இருக்கக் கூடாது. துன்பப்படுத்துவதுதான் அவர்கள் சொல்லும் திராவிட மாடல் என்பதை திமுக நிருபித்து வருகின்றது" என விமர்சித்தார்.

அப்போ திருந்தல.. அனுபவிக்கிறாங்க
மேலும் பேசிய டிடிவி தினகரன், "எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பொதுக்குழுவை கூட்டி ஸ்டாலினையே பொதுச்செயலாளராக அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஆட்சிக் காலத்தில் அதிமுக அமைச்சர்களின் ஊழலைக் கண்டித்தேன். அவர்கள் திருந்தவில்லை. இப்போது அனுபவிக்கிறார்கள். அம்மாவிற்கு துரோகம் செய்துள்ளனர். விலைபோகாத சிங்கங்கள் இன்னும் அதிமுகவில் சிலர் உள்ளனர்.

நோ ‘மணி’ ஆன மணிகள்
கொங்கு மண்டலம் எங்கள் கோட்டை என்றார்கள். இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் என்ன நடந்தது? மணி அண்ணன்களிடம் அப்போதே சொன்னேன். அவர்கள் கேட்கவில்லை. இப்போது ரெய்டில் மாட்டிக்கொண்டு முழிக்கிறார்கள். வேலுமணி, தங்கமணியெல்லாம் இப்போ 'நோ' மணி ஆகிவிட்டனர். 1988 ஆம் ஆண்டு என் 26 வய்திலேயே கருணாநிதியை எதிர்கொண்டவன் நான். இந்த எடப்பாடி எல்லாம் எம்மாந்திரம்?

65,000 கோடி
ஜெயலலிதா ஆட்சி மீண்டும் அமையாததற்கு பழனிசாமியே நூறு சதவீதம் காரணம். ஜெயலலிதா சாதி பேதம் இன்றி வழிநடத்திய கட்சியை வட்டார கட்சியாக மாற்றிவிட்டார் எடப்பாடி பழனிசாமி. அதிமுக வென்ற 65 தொகுதி என்பது 65,000 கோடி ருபாய் உழைப்பு. நாடாளுமன்ற தேர்தலில் அமமுக பிரதமரை தேர்ந்தெடுக்கும் நிலையில் இருக்கும். " எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications