ஜெ.,வின் ஆன்மாவிற்கு பயந்து.. நலத்திட்டங்களை கூடுதலாக செய்கிறோம்... ஓபிஎஸ் பேச்சு
திருப்பூர்: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆன்மாவிற்கு பயந்து மக்கள் நலத்திட்டங்களை கூடுதலாக செயல்படுத்தி வருவதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
வருகிற 18-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் தேர்தல் களம் அனல் பறந்து வருகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வேட்பாளர்களுக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், திருப்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஆனந்தனை ஆதரித்து ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

கூடுதல் நலத்திட்டங்கள்
நம்மால் ஆளாக்கப்பட்டவர்கள் ஒழுங்காக ஆட்சி செய்கிறார்களா என்று மேலே இருந்து கொண்டு, ஜெயலலிதா பார்ப்பார் என்ற பயம் காரணமாக, கூடுதலாகவே மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம் என்று கூறினார்.

ஓபிஎஸ் உறுதி
மேலும், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்த போது, எந்த நல்ல திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை என்று குற்றம் சாட்டிய ஓ. பன்னீர்செல்வம், 15 லட்சம் குடிசை வீடுகள் கணக்கெடுக்கப்படுள்ளது என்றும் அவை அனைத்தும் கான்கீரிட் வீடுகளாக மாற்றப்படும் எனவும் உறுதியளித்தார்.

முதன்மை மாநிலம்
தமிழகம் கடந்த 4 வருடங்களாக வேளாண்மையில் முதன்மை மாநிலமாக விளங்குகிறது என்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பெருமிதம் தெரிவித்தார். திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் பல்வேறு திட்டங்களை செய்யாமல் கிடப்பில் போட்டதாகவும், ஜெயலலிதா பல்வேறு திட்டங்களை செய்திருப்பதாகவும் பன்னீர்செல்வம் குறிப்பிட்டார்.

ஜல்லிக்கட்டு நாயகன்
முன்னதாக, தான் தமிழக முதலமைச்சராக இருந்தபோது பிரதமர் மோடியிடம் பேசி, ஜல்லிக்கட்டு தடையை நீக்கியதாகவும் சுட்டிக்காட்டினார். அதற்காக தன்னை யாரும் ஜல்லிக்கட்டு நாயகன் என கூற வேண்டாம் என்றும் அப்போது கேட்டுக் கொண்டார். மேலும், தனக்கும், முதல்வர் பழனிசாமிக்கும் கலகத்தை ஏற்படுத்த நினைக்கும் மு.க ஸ்டாலினுக்கு பில்டிங், பேஸ்மென்ட்வீக் எனவும் விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications