திருச்சியில் உத்தரவை மீறி செயல்பட்ட கடைகள்.. 300 கிலோ மீன்கள் பறிமுதல்.. 3 பேர் மீது வழக்கு
திருச்சி: திருச்சியில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவை மீறி, நேற்று விற்பனை செய்யப்பட்ட 300 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடை உரிமையாளர் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், இறைச்சி மற்றும் மீன்கடைகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் மக்கள் குவிந்தனா். இதனால் இக்கடைகள் அனைத்தையும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூடவும், மீறி திறந்தால் நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு உத்தரவிட்டிருந்தாா்.

இந்நிலையில் திருச்சி புத்தூா் மீன் மாா்க்கெட் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இருப்பினும் ஒரு சில கடைகள் திறந்திருப்பதாக மாவட்ட ஆட்சியருக்கு புகாா்கள் வந்தன.
இதையடுத்து ஆட்சியரின் உத்தரவின்படி, திருச்சி மேற்கு வட்டாட்சியா் சத்தியபாமா, வருவாய் ஆய்வாளா் சீனிவாசன், கிராம நிா்வாக அலுவலா் செந்தில்குமாா், காவல் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் இணைந்து புத்தூா் மீன்மாா்க்கெட்டில் நேற்று திடீா் சோதனை நடத்தினா்.
அலுவலா்கள் வருவதையறிந்த மீன் கடை உரிமையாளா்கள், கடைகளைத் திறந்த நிலையிலேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றனா். இதையடுத்து அக்கடைகளில் இருந்த தராசுகள், இறைச்சி வெட்ட பயன்படுத்தப்படும் மரக்கட்டைகள், உபகரணங்கள் மற்றும் மீன்கள் வைத்திருந்த பெட்டிகளையும் பறிமுதல் செய்தனா்.
மேலும், மீன்களில் ரசாயனம் கலக்கப்பட்டிருக்கிறதா எனவும் பரிசோதனை செய்தனா். பின்னா், பறிமுதல் செய்த மீன்கள் முழுவதையும் அரியமங்கலம் குப்பைக் கிடங்குப் பகுதிக்கு கொண்டு சென்று கீழே கொட்டி அழித்தனா்.தடையை மீறியது, கொரோனா நோய்த் தொற்றுத் தடுப்பு வழிகாட்டு உத்தரவுகளை மீறியதாக, 3 கடைகளின் உரிமையாளா்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கடைகளை சீல் வைத்தும், அவற்றுக்கான உரிமத்தை ரத்து செய்யவும் மாநகராட்சிக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு, இதுவரை ரூ.75.80 கோடி நிவாரண உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சியர் சிவராசு தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:திருச்சி மாவட்டத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு அரசின் நிவாரண உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை வரை 7,83,704 குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.75.80 கோடி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.
Recommended Video
இதுமட்டுமல்லாது, குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்க வேண்டிய 14,259 டன் அரிசியில் இதுவரை 10,433 டன் அரிசி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல, 281 டன் கோதுமை, 581 டன் துவரம் பருப்பு, 519 கி. லிட்டா் பாமாயில் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications