சைக்கிள் வாங்க தாத்தா கொடுத்த ரூ.10,000... கொரோனா நிவாரண நிதியாக அளித்த சிறுவன்
திருச்சி: திருச்சி காட்டூரில் பிறந்தநாள் பரிசாக சைக்கிள் வாங்குவதற்கு தாத்தா கொடுத்த ரூ.10,000-ஐ கொரோனா நிவாரண நிதியாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளான் சிறுவன் விஜேஷ் ராம்.
உலகம் முழுவதும் ஆட்கொண்டிருக்கும் கொடிய நோயான கொரோனாவில் இருந்து பொதுமக்களை காக்கவும், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளியோருக்கு நிவாரண உதவி வழங்கவும் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. அதன்படி பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் தொடங்கி மாத ஊதியம் பெறுவோர் வரை தங்களால் முடிந்த தொகையை கொரோனா நிவாரண நிதியாக அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மாவட்ட காட்டூரை சேர்ந்த 8-ம் வகுப்பு சிறுவன் விஜேஷ்ராம், தனது பிறந்தநாளுக்காக சைக்கிள் வாங்கிக்கொள்ளும் படி தாத்தா கொடுத்த ரூ.10,000 பணத்தை கொரோனா நிவாரண நிதியாக மாவட்ட ஆட்சியர் சிவராசுவிடம் வழங்கினான். சிறுவனின் இந்த பெருந்தன்மையை பாராட்டிய மாவட்ட ஆட்சியர் அந்த நிதியை பெற்றுக்கொண்டார்.

சிறுவன் விஜேஷ்ராமை போலவே திருச்சி மன்னா் மெமோரியல் பள்ளியைச் சோ்ந்த முதலாம் வகுப்பு மாணவி ஆராதனா, தனது சிறுசேமிப்பு நிதியான ரூ.575-ஐ மாவட்ட ஆட்சியர் சிவராசுவிடம் வழங்கினாா். மேலும், அதே பள்ளியைச் சோ்ந்த 4ஆம் வகுப்பு மாணவி சாதனா, தனது சேமிப்பு நிதியான ரூ.677-ஐ கொரோனா நிவாரண நிதியாக கொடுத்தார்.
இதுவரை திருச்சி மாவட்ட நிர்வாகத்திற்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.87 லட்சம் வந்துள்ள நிலையில் பள்ளி மாணவ, மாணவிகளும் தங்களின் பங்களிப்பை செலுத்த ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications