போலீசாரைக் கண்டித்து தீக்குளிக்க முயன்ற தம்பதி... திருச்சி ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பு!
திருச்சி : திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, காவல் துறையின் நடவடிக்கையை கண்டித்து, கணவன், மனைவி தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி அரியமங்கலம் உக்கடை பகுதி சேர்ந்த ஷேக்தாவூத் என்பவர், தனியார் நிறுவனத்தில் லாரி ஒன்று வாங்கி, மதந்தோறும் அதற்காக பணம் கட்டி வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது வாகனத்தின் லைசென்ஸ் புத்தகம் தொலைந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த மூன்று மாதமாக பணம் கட்ட வில்லை என தெரிகிறது.
இதன் காரணமாக அந்த நிறுவனத்தினர், தொடர்ந்து பணத்தை கட்டும்படி ஷேக்தாவூத்தை வற்புறுத்தி வந்துள்ளனர். இதனால், தனது லாரியை ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் ஷேக்தாவூத் ஒப்படைத்துள்ளார். ஆனால் காவல் நிலையத்தில் உள்ள காவலர்கள் அவரின் அனுமதி இல்லாமல், அந்த லாரியை, சம்மந்தப்பட்ட நிறுவனத்திடம் ஒப்படைத்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவால்துறையிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஷேக்தாவூத், தனது மனைவி பாத்திமாவுடன் இன்று, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக முன்பு, காவல்துறையின் நடவடிக்கையை கண்டித்து தீக்குளிக்க முயன்றார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், தம்பதியர் மீதும் தண்ணீரை உற்றி பத்திரமாக மீட்டனர். இதனால் பெரும் அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டது.
இதுகுறித்து ஷேக்தாவூத் கூறியபோது, தனது வாழ்வாதாரமாக விளங்கும் லாரியை என்னுடைய அனுமதி இல்லாமல் காவல்துறையினர் ஒப்படைத்து விட்டனர். 28 ஆயிரம் ரூபாய் பணம் கட்டியும், காவல்துறையினர் தனது அனுமதி இல்லாமல், லாரியை அந்த நிறுவனத்திற்கு ரகசியமாக ஒப்படைத்து விட்டதாக அவர் குற்றம்சாட்டினார். இது மட்டுமல்லாமல் பணத்தைக் கட்டுமாறு தொடர்ந்து தங்களை மிரட்டி வருகின்றனர் என்றும், உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.
இதனையடுத்து, மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் உள்ளே தம்பதியரை அழைத்துச் சென்ற போலீசார், தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்ட ஆட்சி அலுவலகம் முன்பு தம்பதியர் திடீரென தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால், ஆட்சியர் அலுவலக வாளகத்தில் சுமார் 30 நிமிடத்திற்கு மேலாக பரபரப்பு ஏற்பட்டது.