'புனித பூமி'யான திருச்சி.. பிரதமர் மோடியை நெஞ்சார வரவேற்கிறோம்-ஆளுநர் ஆர்.என். ரவி திடீர் ட்வீட்!
சென்னை: புனித பூமியான திருச்சிராப்பள்ளிக்கு வருகை தரும் நமது அன்புக்குரிய பிரதமர் நரேந்திர மோடியை நெஞ்சார வரவேற்கிறோம் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமது எக்ஸ்ப் பக்கத்தில் திடீரென பதிவிட்டுள்ளார்.
திருச்சியில் இன்று நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு சமூக வலைதளங்களில் #VanakkamModi என பாஜகவினர் #GoBackModi, #GoBack_PanautiModi என மோடி எதிர்ப்பாளர்களும் பதிவிட்டு டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: புனித பூமியான திருச்சிராப்பள்ளிக்கு வருகை தரும் நமது அன்புக்குரிய பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை நெஞ்சார வரவேற்கிறோம். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழாவில் மாண்புமிகு பிரதமர் அவர்கள் கலந்து கொள்கிறார். விமானம், ரயில், சாலைகள், எண்ணெய் மற்றும் எரிவாயு, துறைமுகம் போன்ற பல முடிக்கப்பட்ட உள்கட்டமைப்பு திட்டங்களை அவர் துவக்கி வைப்பார். தமிழ்நாட்டில் ரூ19,850 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார். திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனைய கட்டடத்தையும், கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட விரைவு எரிபொருள் மறுசுழற்சி ஆலையையும் (டிஎஃப்ஆர்பி) அவர் தொடங்கி வைக்கிறார்.
புனித பூமியான திருச்சிராப்பள்ளிக்கு வருகை தரும் நமது அன்புக்குரிய பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை நெஞ்சார வரவேற்கிறோம். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழாவில் மாண்புமிகு பிரதமர் அவர்கள் கலந்து கொள்கிறார். விமானம், ரயில், சாலைகள், எண்ணெய் மற்றும் எரிவாயு,… pic.twitter.com/F0EEGr7xrC
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) January 2, 2024
தமிழ்நாட்டு மக்கள் மீதான அபரிமிதமான அன்பு மற்றும் பாசத்துக்காகவும், மாநிலத்தின் நலன் மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான அர்ப்பணிப்புக்காகவும் பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி. இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி பதிவிட்டுள்ளார்.
திருச்சியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடியுடன் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்கிறார். திருச்சி பயணத்தை முடித்துக் கொண்டு லட்சத்தீவுகள் செல்கிறார் பிரதமர் மோடி. மேலும் கேரளாவின் திருச்சூரில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.












Click it and Unblock the Notifications