புறா வளர்ப்பில் காதல் அரும்பி லாக்டவுனில் பூட்டிய கோவில் முன் திருமணம்.. அடடே திருச்சி காதலர்கள்
திருச்சி: கொரோனா பரவுவதைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட லாக்டவுனால் தாங்கள் சந்திக்க முடியாத சூழ்நிலையை முடிவுக்கு கொண்டுவர பூட்டிய கோவில் முன்பாக திருமணம் செய்து கொண்டு போலீசில் தஞ்சம் அடைந்தனர் திருச்சி காதல் ஜோடிகள்.
திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியை சேர்ந்த ஆசாத் பிரின்ஸ், புறா வளர்ப்பில் ஈடுபாடு உள்ளவர். இதனால் பொன்மலை பகுதியில் ஞாயிறுதோறும் நடைபெறும் சந்தைக்கு செல்வது வழக்கம்.

புறா சந்தைக்குப் போகும் வழியில் காட்டூரை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. ஆனால் இருவர் காதலுக்கும் வீடுகள் தரப்பில் கடும் எதிர்ப்பு.
இந்த நிலையில் கொரோனாவை காரணம் காட்டி லாக்டவுனும் அமலாக்கப்பட்டது. இதனால் காதல் ஜோடிகள் நேரில் சந்திக்க முடியாமல் துயரப்பட்டுள்ளனர். இந்த துயரத்துக்கு முடிவு கட்டுவோம் என இருவரும் உறுதி எடுத்துக் கொண்டு சென்ற இடம் ஜங்ஷன் ரவுண்டானா அருகே பூட்டி இருந்த வழிவிடு வேல்முருகன் கோவில்.
அந்த கோவில் பூட்டியிருந்தாலும் பரவாயில்லை என அந்த பெண்ணுக்கு தாலி கட்டினார் ஆசாத் பிரின்ஸ். பின்னர் நேராக கோட்டை மகளிர் காவல்நிலையம் சென்று போலீசிடம் அடைக்கலம் கேட்டனர்.
இதனால் இருதரப்பிலும் பெற்றோரை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பின்னர் காதலர்கள் இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் திருமணத்துக்கு இருதரப்பும் ஒப்புக் கொண்டது. காதல் மனைவியை பிரின்ஸ் அழைத்து செல்லலாம் எனவும் போலீசார் அனுமதித்தனர்.
லாக்டவுனுக்குள்ளும் எத்தனை சரித்திரங்கள்!












Click it and Unblock the Notifications