கேன்சர் மாத்திரை + வாட்டர் + ஊசி.. அதீத போதையை அனுபவிக்க நினைத்த இளைஞர்.. அடுத்து நடந்த கொடூரம்!
திருச்சி: போதைக்காக வலி நிவாரண மாத்திரைகளை கரைத்து ஊசி மூலம் உடலில் செலுத்திக்கொண்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் போதை கலாச்சாரங்கள் அதிகரித்து வருவதாக அரசியல் கட்சியினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
இதனை உறுதி செய்யும் விதமாக பள்ளி மாணவ/மாணவிகள் போதையில் தள்ளாடும் வீடியோக்கள் அடிக்கடி வெளியாகி வருகின்றன.
3 அடி நீளம்.. 2 அடி உயரம்.. மாலை அல்ல! காலணியை காணிக்கையாக வழங்கும் கிராம மக்கள்.. விசித்திர வழிபாடு
போதை
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் வரை தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் பழக்கம் இப்போது இருக்கும் அளவிற்கு இருந்ததில்லை. ஆனால் இந்த 20 ஆண்டுகளில் படிப்படியாக தொடர்ந்து பழக்கம் என்பது கலாச்சாரமாக வளர்ந்து, தற்போது பள்ளி மாணவர்கள் மத்தியிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இளைஞர்கள் மதுவை கடந்து, பல்வேறு போதைப் பொருட்களை நாடிச் செல்ல தொடங்கியுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் போதை கேக்குகள் விற்பனை செய்யப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
புது வழி
இவ்வாறு இருக்கையில் போதைப் பொருட்களை கட்டுப்படுத்த காவல்துறை அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இவற்றை விற்பனை செய்பவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக போதைப்பொருளை வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி இதிலிருந்து இளைஞர்கள் மீள்வதற்கு முயலாமல், வேறு விதங்களில் எப்படி போதையை அனுபவிப்பது என யோசித்து புதுப்புது வழிமுறைகளை கண்டுபிடித்துள்ளனர்.
போதைக்கு அடிமை
அந்த வகையில் திருச்சியில் போதைக்காக இளைஞர்கள் சிலர் வலி நிவாரணி மாத்திரையை தண்ணீரில் கரைத்து அதனை ஊசி மூலம் உடலில் செலுத்தி போதையை அனுபவித்து வருகின்றனர். இந்த புதிய முறையை முயன்று பார்த்த இளைஞர் ஒருவர் பரிதாபமாக நேற்று உயிரிழந்துள்ளார். திருச்சியின் மேலசிந்தாமணி பகுதியை சேர்ந்தவர் ஜாவித். இளைஞரான இவர் அப்பகுதியில் உள்ள மற்ற இளைஞர்களுடன் சேர்ந்து போதைக்கு அடிமையாகியுள்ளார்.
மாரடைப்பு
இவ்வாறு இருக்கையில், அதீத போதை வேண்டும் என புற்றுநோய் சிகிச்சைக்கு வலி நிவாரணியாக கொடுக்கப்படும் மாத்திரைகளை முறைகேடாக பெற்று அதனை நீரில் கலந்து, குளுகோஸ் போல ஊசி மூலம் உடலில் செலுத்திக்கொண்டுள்ளார். இது அதீத போதையை கொடுக்கும் என சொல்லப்பட்டுள்ளது. இப்படி மற்ற இளைஞரின் பேச்சைக் கேட்டு ஊசியை செலுத்திய ஜாவித்திற்கு சிறிது நேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் அவர் மயங்கி விழுந்துள்ளார்.
உயிரிழப்பு
சுற்றியிருந்த நண்பர்கள் உடனடியாக ஜாவிதை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். இந்த சம்பவம் காவல்துறையினருக்கு தெரிய வரவே, ஜாவிதின் நண்பர்கள், போதை மாத்திரையை விற்றவர்கள் என அனைவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அதீத போதைக்கு ஆசைப்பட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் திருச்சி மட்டுமல்லாது தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.