என்ஐடி ஹாஸ்டலில் பாலியல் தொல்லை! ஒழுங்கா ட்ரெஸ் போடனும்.. வாயை விட்ட வார்டன்! கலெக்டர் சொன்ன தகவல்!
திருச்சி: திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகமான என்ஐடி கல்லூரி விடுதியில் வியாழக்கிழமை கல்லூரி மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் மாணவியின் உடை தொடர்பாக விடுதிக் காப்பாளர் பேபி அவதூறாக பேசியதாக மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் வார்டன் குறித்து புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்து இருக்கிறார்.
திருச்சி மாவட்டம் துவாக்குடியில் தேசிய தொழில்நுட்பக் கழகமான என்ஐடி விடுதி செயல்பட்டு வருகிறது. அங்கு ஏராளமான மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் விடுதியில் திடீரென மின்விநியோகம் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

மின் இணைப்பில் ஏற்பட்ட பழுது காரணமாக மின்சார வினியோகம் நிறுத்தப்பட்டதாகவும், இதற்காக ஒப்பந்த ஊழியரை அழைத்து மின் இணைப்பை சரி செய்ய விடுதி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அதுவரை மாணவிகள் தங்கள் அறைகளில் இருக்க வேண்டுமென விடுதி வார்டன் பேபி கூறியிருக்கிறார்.
இதனையடுத்து மாணவிகள் தங்கள் அறைகளில் செல்போன் டார்ச் மற்றும் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படித்திருக்கின்றனர். இந்த நிலையில் மின் இணைப்பை சரி செய்ய வந்த ஒப்பந்த ஊழியர் ஒருவர் மாணவி தனியாக படித்துக் கொண்டிருந்தபோது பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். இதையடுத்து அந்த மாணவி அலறிய நிலையில் அருகில் இருந்த மாணவிகள் திரண்டு வந்து அந்த இளைஞரை பிடித்தனர்.
மேலும் இது தொடர்பாக திருவெறும்பூர் காவல் நிலையத்திற்கும் புகார் அளிக்கப்பட்டது. இதற்கிடையே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக அவர்கள் வார்டனிடம் புகார் தெரிவித்து இருக்கின்றனர். அப்போது மாணவியின் உடை குறித்து அவதூறாக பேசிய கல்லூரி விடுதியின் வார்டனான பேபி, அந்த மாணவியை திட்டியும் இருக்கிறார். இந்த நிலையில் பாலியல் தொல்லை கொடுத்த நபர் மீது நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியதோடு, மாணவியை அவதூறாக பேசிய வார்டன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி மாணவிகள் கல்லூரி வளாகத்தில் என்ஐடி இயக்குனரான அகிலாவின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
விடிய விடிய போராட்டம் தொடர்ந்து நிலையில் இது தொடர்பான தகவல் ஊடகங்களில் வெளியானது. மாணவியின் ஆடை குறித்து பேசிய பேபி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், விடுதி பெண் வார்டன்களை மாற்ற வேண்டும் என கோரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகளுக்கு ஆதரவாக மாணவர்களும் போராட்டத்தில் குதித்ததால் அங்கு நிலைமை தீவிரமானது. இதனையடுத்து திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மாணவிகளிடம் தனித்தனியாக புகார் பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் உறுதி அளித்தார்.
இந்நிலையில் தனது பேச்சுக்கு கல்லூரி வார்டனான பேபி வருத்தம் தெரிவித்தார். மாணவிகளிடம் வெளிப்படையாக அவர் மன்னிப்பு கோரிய நிலையில் மாணவிகளின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இந்த நிலையில் வார்டன் குறித்து புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியிருக்கிறார் திருச்சி மாவட்ட ஆட்சியர். மாணவிகள் போராட்டத்துக்கு முக்கிய காரணமான பாலியல் தொல்லை அளித்த நபர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும், உரிய நடவடிக்கை எடுக்காமல் மாணவிகள் குறித்து அவதூறாக பேசிய வார்டன் பேபி குறித்து புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications