முதல்வராகும் எடப்பாடி பழனிசாமி? அதிமுக - தவெக இடையே பேச்சுவார்த்தை! லீமா ரோஸ் தூக்கிப் போட்ட குண்டு!
திருச்சி: திடீரென புது குண்டை தூக்கி போட்டு இருக்கிறார் லால்குடி அதிமுக எம்எல்ஏ ஆன லீமா ரோஸ். தமிழக வெற்றி கழகம் - அதிமுக இடையே பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் சுமூகமான முடிவு விரைவில் எட்டப்படும் என சொல்லி இருக்கிறார். குறிப்பாக "அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அமையும்.. அவர் முதல்வர் ஆவார்" என பேச்சுவார்த்தை நடப்பதாக அவர் கூறியிருப்பதை பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மாநில அரசியல் களம் பரபரப்பாக மாறியுள்ளது. கடந்த 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்ற வாக்குப்பதிவுக்குப் பிறகு, நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

வழக்கம்போல முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன் பின்னர் இயந்திர வாக்குகள் எண்ணப்பட்டபோது, ஆரம்பத்திலிருந்தே தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை வகித்தது கவனிக்கத்தக்கது.
இறுதியில், தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
234 தொகுதிகள் கொண்ட சட்டமன்றத்தில் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவைப்படும் நிலையில், அந்த எண்ணிக்கையைத் தாண்ட முடியாததால் தெளிவான பெரும்பான்மை யாருக்கும் கிடைக்கவில்லை. இதனால், அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் மீது அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது. இந்த சூழலில், கட்சித் தலைவர் விஜய் ஆட்சியை அமைக்க ஆளுநரை அணுகுவார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெரும்பான்மை இல்லாதபோதும், தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் அவரை அரசு அமைக்க அழைக்கும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. அப்படி நடந்தால், முதல்வராக பொறுப்பேற்ற பிறகு சட்டமன்றத்தில் குறிப்பிட்ட காலத்திற்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழல் உருவாகும்.
தற்போது தமிழக வெற்றிக் கழகத்துக்கு மேலும் 10 முதல் 12 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.
இதற்காக பிற கட்சிகளின் ஆதரவைப் பெற முயற்சிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் மற்றும் தேமுதிக போன்ற கட்சிகள் ஆதரவு அளிக்கலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. மேலும், பாட்டாளி மக்கள் கட்சி போன்ற கட்சிகளும் ஆதரவளிக்கலாம் என எதிர் பார்க்கப்படுகிறது. அதே சமயம், எதிர்க்கட்சியான அதிமுக கூட, அரசியல் சூழ்நிலையைப் பொறுத்து ஆதரவு வழங்கும் வாய்ப்பு உள்ளது என்ற கருத்தும் நிலவுகிறது.
தமிழக வெற்றி கழகம் - அதிமுக இடையே பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் சுமூகமான முடிவு விரைவில் எட்டப்படும் என சொல்லி இருக்கிறார் லால்குடி அதிமுக எம்எல்ஏ ஆன லீமா ரோஸ். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தனக்காக பணியாற்றிய நிர்வாகிகளுக்கு நன்றி கூறி கூறினார். தொடர்ந்து பேசிய அவர்," தமிழகத்தில் அடுத்து ஆட்சி அமைப்பது குறித்து தமிழக வெற்றிக் கழகம் அதிமுக இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
அண்ணன் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி அமையும். எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவி ஏற்பது தொடர்பாக தான் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த பேச்சு வார்த்தை சுமூகமாக முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. பேச்சு வார்த்தைகள் குறித்து அதிமுகவின் தலைமையான எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பார். எந்த முடிவாக இருந்தாலும் கட்சி தான் அறிவிக்கும்" எனக் கூறியிருக்கிறார்.
இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி 50க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்றுள்ளது. அதிமுக தனித்து 47 தொகுதிகளில் வென்றுள்ளது. தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வென்றிருக்கும் நிலையில் இவ்வளவு அதிக தொகுதிகளை வென்ற தவெக எடப்பாடி பழனிச்சாமி முதல்வராவதை ஏற்றுக்கொள்ளுமா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. அதே நேரத்தில் திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக அதிமுக தவெகவுக்கு ஆதரவு அளிக்கலாம் என சொல்லப்படும் நிலையில் லீமா ரோஸின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications