ரிசைன் செய்யுறதுன்னா டங்ஸ்டனுக்காக வேண்டாம்! டாஸ்மாக்கிற்காக செய்க! ஸ்டாலினுக்கு அண்ணாமலை அட்வைஸ்
திருச்சி: முதல்வர் ஸ்டாலின் அவர்களே! டங்ஸ்டன் சுரங்கத்திற்காக அல்ல, டாஸ்மாக்குக்காக ராஜினாமா செய்யுங்கள் என திருச்சியில் பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்திருந்தார்.
நாகை மாவட்டத்தில் மறைந்த மாவட்ட தலைவரின் படத்திறப்பு விழாக்காக கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தந்த பாரதிய ஜனதா கட்சியில் மாநில தலைவர் அண்ணாமலை திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: டங்ஸ்டன் சுரங்க விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சரை வரும் 12-ம் தேதி சந்திக்க உள்ளோம். அவரை சந்தித்த பின் ஒரு நல்ல முடிவோடு வருவோம்.
டங்ஸ்டன் விவகாரத்தில் முதலமைச்சர் சட்டமன்றத்தில் நாடகமாடியுள்ளார். முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்றால் டாஸ்மாக் பிரச்சனைக்காக அவர் பதவி விலக வேண்டும்.
மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை எதிர்க்கும் தமிழக அரசு விஸ்வகர்மா திட்டத்திற்கு மாற்று பெயரில் கைவினை கலைஞர்கள் என்று பெயர் மாற்றி அமல்படுத்துகிறது. இறுதியில் அவர்கள் மத்திய அரசிடம் தான் நிதி கேட்டு வருவார்கள்.
அப்படி கிடைக்கவிட்டால், வடக்கு வாழ்கிறது தெற்குத் தேய்கிறது என்று வசனம் பேசுவார்கள். ஆதிதிராவிட நலத்துறை சார்பில் நடத்தப்படும் தொழிற்பயிற்சியில் முடி திருத்துதல், இஸ்திரி போடுதல் உள்ளிட்ட தொழில்கள் கற்றுத் தரப்படுகின்றன. இது குலக்கல்வி இல்லையா?
விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கம் என்பதால் இந்தியாவில் தொடர்ந்து தடை செய்யப்பட்டு வருகிறது. ஒரு காலத்தில் விடுதலைப் போராட்டமாக ஆரம்பித்த விடுதலைப் புலிகள் போராட்டம் பல்வேறு பழிவாங்கும் படுகொலை நிகழ்த்தியதால் அது பயங்கரவாத இயக்கமாக மாறியது.
எனவே, இலங்கையிலும் இந்தியாவிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து பேசுவதற்கு ஒன்றுமில்லை என்றார். திருமாவளவன் பிஜேபியை வழி நடத்துவது அதானியா அல்லது மோடியா என்று கேட்டுள்ளாரே என்ற கேள்விக்கு அண்ணாமலை பதில் அளிக்கையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு விசிகவை நடத்துவது திருமாவளவனா அல்லது துணை பொது செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா என்று நான் கேட்டிருந்தேன்.
அவருக்கு திடீரென கோபம் வந்துள்ளது. அவர் ஒரு சீனியர் லீடர், கட்சி கண்ட்ரோல் அவரிடம் இருக்கிறது என்று கேட்டால், கடந்த 15 நாட்களாக கட்சி அவரது கண்ட்ரோலில் இல்லை. புத்தக வெளியீட்டு விழாவுக்கு ஆதவ்வை நான்தான் அனுப்பினேன் என திருமாவளவன் தெரிவித்திருந்தார்.
அவர் அனுப்பியிருக்கும் நிலையில் முதல்வருக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். எனவே ஆதவ் பேசிய கருத்துகள், திருமாவளவனின் கருத்துகளா. இல்லை என்றால் கட்சி அவருடைய கட்டுப்பாட்டில் இல்லை என்றுதானே அர்த்தம் என அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.
மீண்டும் dmk பைல்ஸ் வெளிவருமா என்ற கேள்விக்கு அவர் கூறுகையில் சட்டமன்ற தேர்தல் நெருங்குகின்ற வேளையில் திமுக பைல்ஸ்- 3 வெளியிடப்படும். அதில், திமுக மட்டுமல்லாது, அதன் கூட்டணி கட்சிகள் எடுத்த டெண்டர்கள், அதனால் அவர்கள் அடைந்த லாபங்கள் குறித்து அம்பலப்படுத்தப்படும்.
இதில் மூன்றரை வருடத்திற்கான டெண்டர் விவகாரத்துடனும் படத்தோடும் வெளியிடப்படும். டெண்டர்கள் அனைத்தும் அமைச்சரின் உறவினருக்குத்தான் சென்றிருக்கும் என அண்ணாமலை தெரிவித்தார். கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி முதல் முதலில் திமுக பைல்ஸ் என்பதை அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications