“ரவுடிகள் சரித்திர பதிவேட்டில் இருந்தவர் அமைச்சர் சேகர்பாபு.. தமிழ்நாடு விளங்குமா?” அண்ணாமலை அட்டாக்
திருச்சி: "சென்னையில் ரவுடி சரித்திர பதிவேட்டில் இருந்தவர் அமைச்சர் சேகர்பாபு. இப்படிப்பட்டவர்கள் அமைச்சர்களாக இருந்தால் தமிழ்நாடு விளங்குமா?" என ஆவேசமாகப் பேசியுள்ளார் அண்ணாமலை.
மத்திய பாஜக அரசின் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக திருச்சியில் தமிழக பாஜக சார்பில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ, வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, "திமுக மேடைகளில் எல்லாம் ஆபாச பேச்சுதான் இருக்கும். அதற்கு கைதட்ட 100 பேர் இருக்கிறார்கள். இதை வைத்துக்கொண்டு, 2026 ஆம் ஆண்டு தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற்று விடலாம் என்கிற மாய உலகத்தில் திமுகவினர் இருக்கிறார்கள்.
வட இந்தியர்கள் யாரும் தமிழர்களைப் பற்றி இழிவாக பேசியதில்லை. ஆனால் திமுகவினர் வடமாநிலத்தில் உள்ள ஒவ்வொரு மாநில முதலமைச்சர்களையும் இழிவாக பேசுகிறார்கள். இதற்கு அவர்களது பயம்தான் காரணம்.
பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உதயநிதி ரசிகர் மன்ற தலைவராக இருக்கிறார். இவருக்கு இந்த பணியை தாண்டி கொஞ்சம் நேரம் இருந்தால் கல்வியைப் பற்றி பேசுவார். அமைச்சர்கள் காந்தி, செந்தில் பாலாஜி, சேகர்பாபு, ரகுபதி உள்ளிட்டோர் மீதும் வழக்குகள் உள்ளன. இவர்கள் எல்லாம் சேர்ந்து தான் தமிழகத்தின் கல்வி கொள்கை குறித்து பேசுகிறார்கள்.
சென்னையில் ரவுடி சரித்திர பதிவேட்டில் இருந்தவர் அமைச்சர் சேகர்பாபு. இப்படிப்பட்டவர்கள் அமைச்சர்களாக இருந்தால் தமிழ்நாடு விளங்குமா?" என ஆவேசமாகப் பேசியுள்ளார் அண்ணாமலை.
அண்ணாமலைக்கும் அமைச்சர் சேகர்பாபுவுக்கும் இடையே கடந்த பல மாதங்களாகவே வார்த்தை மோதல் நடந்து வருகிறது. தினமும் பொய்களில் பிறந்து, பொய்களில் வாழும் ஒரு மாநில கட்சியின் தலைவர் என்று யாரேனும் இருப்பாரெனில், அவர் அண்ணாமலை ஒருவராகத்தான் இருக்க முடியும் என அமைச்சர் சேகர்பாபு அண்மையில் விமர்சித்திருந்தார்.
மேலும், ஒரு கட்சியின் மாநில தலைவராக அண்ணாமலை போன்றவர்கள் இருப்பது தமிழ்நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய சாபக்கேடு. அரசியலில் நாகரீகத்தை துறந்து சாலையில் கச்சேரி பாடுபவர்கள் போல் அவர் பேசுவதற்கெல்லாம் பதில் கொடுத்துக்கொண்டிருக்க முடியாது எனத் தெரிவித்திருந்தார் சேகர்பாபு.












Click it and Unblock the Notifications