பாஜகவுடன் கூட்டணி வைக்க திமுகவுக்கு தகுதியே இல்லை.. விளாசி தள்ளிய மாநில தலைவர் அண்ணாமலை
திருச்சி: பாஜக, ஆர்எஸ்எஸ் உடன் கூட்டணி வைக்க 3 முக்கிய அம்சங்கள் இருக்க வேண்டும். ஆனால் திமுகவிடம் எதுவுமே இல்லை. இதனால் பாஜவுடன் கூட்டணி வைக்க திமுகவுக்கு தகுதி கிடையாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சரமாரியாக விமர்சனம் செய்துள்ளார்.
Recommended Video
புதுக்கோட்டையில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்க திருச்சி விமான நிலையம் வந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது திமுகவை கடுமையாக அவர் விமர்சனம் செய்தார். மேலும் இலவச திட்டங்கள் பற்றி பேசிய அவர் தமிழ்நாட்டில் பொருளாதார சுமை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
நம்ப வச்சு ஏமாத்திட்டீங்களே.. 'நரிக்குறவ பெண் அஸ்வினிக்கு இன்னும் கடன் கிடைக்கல’ - அண்ணாமலை காட்டம்!
எந்த காலத்திலும் கூட்டணி கிடையாது
பாஜக தலைவர் அண்ணாமலையிடம் பாஜக ஆர்எஸ்எஸ் உடன் குறைந்தபட்ச சமரசம் கிடையாது என்ற முதல்வர் ஸ்டாலினின் பேச்சு பற்றி கேட்டதற்கு, ‛‛பாஜக, ஆர்எஸ்எஸ் உடன் கூட்டணி வைப்பதற்கு ஒரு குறைந்தபட்ச தகுதி வேண்டும். அதாவது குடும்ப ஆட்சி இருக்கக் கூடாது. ஊழலற்ற அரசாங்கம் இருக்க வேண்டும். மக்களுக்கு நல்லாட்சி கொடுக்க வேண்டும். இந்த மூன்றும் இல்லாத திமுக குறைந்தபட்ச சமரசத்தை பற்றி பேசக்கூடாது. கூட்டணி வைக்க அருகதை இல்லை என முதலமைச்சருக்கு தெரிந்து விட்டது. இதை ஒப்புக்கொண்டதற்கு நன்றி. எந்த காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி வைக்க திமுகவிற்கு தகுதி கிடையாது'' என்றார்.
இலவசங்களால் முன்னேறி இருக்கிறதா?
இலவசங்கள் பற்றி நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியது குறித்து கேட்டதற்கு, ‛‛திமுக என்பது ஒரு கட்சியே கிடையாது. சினிமாவில் வரும் கூத்து பட்டறை போல் உள்ளது. பிரதமரை சந்திப்பதற்கு முன்பு இப்படி எந்த முதல்வரும் பேசியது கிடையாது. ஆனால் பிரதமரை சந்திக்கும் போது அவர் உட்கார்ந்து இருந்ததை பார்த்தால் நாற்காலியில் இருந்து கிழே விழுவது போல் உள்ளது. இலவசங்களால் தமிழகம் முன்னேறி இருக்கிறதா என்பதை ஆராய ஒரு குழு அமைக்க வேண்டும். இலவசங்களால் வளர்ந்தது திமுக குடும்பமே தவிர தமிழகம் அல்ல.
குட்டி இலங்கையாகும் தமிழ்நாடு
திமுக அளித்த 508 வாக்குறுதிகளில் 100 வாக்குறுதிகள் இலவசங்களாகவே உள்ளன. தமிழ்நாட்டை பொறுத்தவரை ஒரு குட்டி இலங்கையாக மாறிக் கொண்டிருக்கிறது. ஏனென்றால் பொருளாதார சுமை தமிழ்நாட்டில் இருக்கிறது. '' என அண்ணாமலை கூறினார். மேலும் அண்ணாமலை கூறும்போது, ‛‛போதைப் பொருட்களை ஒழிக்க வேண்டும் என்று முதல்வர் சொல்கிறார். ஆனால் சுதந்திர தினத்திற்கு முந்தைய நாளான ஆகஸ்ட் 14-ந் தேதி மதுபான கடை சாதனை படைக்கிறது'' என்றார்.
காங்கிரஸ் மீது விமர்சனம்
விநாயகர் சதுர்த்திக்கு காங்கிரஸ் கட்சியினர் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் விநாயகர் சிலை வைப்பதாக கூறியிருக்கிறார்களே என்ற கேள்விக்கு, ‛‛ராகுல் காந்தி ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒவ்வொரு வேஷம் போடுவார். ராம் ரஹீம், லிங்காயத்துக்கு தீட்சை வாங்கியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக நான் ஒரு சிவபக்தன் என்றார். பள்ளிவாசல், சர்ச் ஏன் குல தெய்வ கோவிலுக்கு கூட செல்வார். அந்த வரிசையில் விநாயகர் சதுர்த்திக்கு விநாயகர் சிலை வைப்பது என்பது எந்த ஒரு புதிய திட்டம் கிடையாது'' என்றார்.