"கோவை சிறையில் மன அழுத்தம் அதிகம் ஏற்படுகிறது.." நீதிபதியிடம் முறையிட்ட சவுக்கு சங்கர்
திருச்சி: கோவையில் தனக்கு மன ரீதியாக அழுத்தம் ஏற்படுவதால் வேறு சிறைக்கு மாற்றுமாறு சவுக்கு சங்கர் திருச்சி மகளிர் நீதிமன்ற நீதிபதியிடம் முறையிட்டார்.
யூடியூப் சேனல் ஒன்றுக்குச் சவுக்கு சங்கர் அளித்த பேட்டியில் பெண் காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாகப் புகார்கள் அளிக்கப்பட்ட நிலையில், கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த விவகாரத்தில் முதலில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து நேர்காணலை எடுத்த ஃபெலிக்ஸ் ஜெரால்டும் கைதாகினார்.
வழக்குப்பதிவு: பல்வேறு ஊர்களிலும் சவுக்கு சங்கருக்கு எதிராகப் புகார்கள் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி திருச்சி மாவட்ட முசிறி டிஎஸ்பி யாஸ்மின் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருச்சியிலும் அம்மாவட்ட மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாகக் கோவையில் இருந்து சவுக்கு சங்கர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு திருச்சி அழைத்து வரப்பட்டார். இதையடுத்து சவுக்கு சங்கரை போலீசார் ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்தும் விசாரித்தனர். போலீஸ் காலம் முடிந்த நிலையில், திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயபிரதா முன்னிலையில் இன்று சவுக்கு சங்கர் ஆஜர்ப்படுத்தப்பட்டர்.
சவுக்கு சங்கர்: அப்போது சவுக்கு சங்கரை பார்த்து நீதிபதி, உரிய முறையில் விசாரணை நடந்ததா.. உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டதா என்று கேள்வி எழுப்பினர்.. அப்போது விசாரணை முறையாக நடந்ததாகக் குறிப்பிட்ட சவுக்கு சங்கர், அடிப்படை வசதிகளை போலீசார் வழங்கியதாகவும் விசாரணையில் தன்னை துன்புறுத்தவில்லை என்றும் கூறினார்.
முறையீடு: இருப்பினும் அவர், "கோவை சிறையில் எனக்கு உளவியல் ரீதியாக பிரச்சினை உள்ளது. அங்கு எனக்கு மன அழுத்தம் அதிகமாக ஏற்படுகிறது. எனக்கு மருத்துவ உதவி தேவை.. எனவே, சென்னை அல்லது திருச்சி சிறைக்கு மாற்றுமாறு கோரிக்கை விடுக்கிறேன்" என்றார். இதைக் கேட்ட நீதிபதி, இந்த கோரிக்கையை மனுவாக வழங்க அறிவுறுத்தினார்.
மேலும், மே 28ஆம் தேதி வரை சவுக்கு சங்கரை நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். நீதிமன்ற காவல் முடிந்த பிறகு திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து சவுக்கு சங்கர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.












Click it and Unblock the Notifications