பாவம் அண்ணாமலை.. கனவாவது காணட்டும் விட்டுருங்க.. கலாய்க்கும் காங்கிரஸ் திருநாவுக்கரசர்
திருச்சி: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும் என்ற அண்ணாமலையின் கனவு நனவாக வாய்ப்பில்லை என்று காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டத்தின் முதலியார் சத்திரம் பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக கட்டப்பட்டுள்ள தண்ணீர் தொட்டியை காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் திறந்துவைத்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் பாஜகவின் எதிர்காலம், ஆதினங்களின் அரசியல் செயல்பாடு, கருத்து சுதந்திரம் ஆகியவை குறித்து பேசினார்.
பாஜகவின் கருவே 'Fringe’ தான் -அமித்ஷா முதல் யோகியின் சர்ச்சை கருத்துக்களை லிஸ்டு போட்ட ராகுல் காந்தி
அண்ணாமலையின் பேச்சு
திருச்சியில் நடைபெற்ற பாஜக ஆட்சியின் 8 ஆண்டு கால பொதுக்கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், இது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பொதுக்கூட்டம். 2024ல் தமிழகத்தில் இருந்து 25 எம்பி-க்களை கொண்டு வருவோம் என்று கூறி வருகிறோம். ஆனால் இந்தக் கூட்டத்தைப் பார்த்தால் தமிழகத்தின் 39 மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம் என்று தெரிவித்திருந்தார்.
அண்ணாமலை பற்றி திருநாவுக்கரசர்
இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர், அனைவருக்கும் கனவு காண உரிமை உண்டு. யாருடைய கனவுக்கும் யாரும் தடை போட முடியாது. ஆனா அண்ணாமலையின் கனவு எதார்தத்தில் நடக்க வாய்ப்பில்லை. பாவம், அவர் கனவாவது காணட்டும் என்று பதிலளித்துள்ளார்.
ஆதீனங்கள் குறித்து கருத்து
அதேபோல் ஆதீனங்கள் குறித்து கூறுகையில், ஆதீனங்கள் அரசியல் பேசலாம். அதற்கு யாரும் தடை போடவில்லை. ஆனால் மக்களை பிளவுபடுத்தும் வகையில் ஆதீனகர்த்தாக்கள், சர்ச் மற்றும் பள்ளிவாசல் உள்ளிட்ட அமைப்பினர் பேசக் கூடாது. கருத்து சுதந்திரம் என்பது மூக்கின் நுனி வரை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். சாதி, மதம் ஆகியவற்றைக் கொண்டு மக்களை பிளவுபடுத்தி வன்முறையை ஏற்படுத்தும் வகையில் பேசக் கூடாது. வரம்பு மீறாமல் நாகரீகம் மற்றும் கலாசாரத்தை பாதுகாக்கும் வகையில் பேச வேண்டும் என்று தெரிவித்தார்.
ரயில்வே பணிகள் குறித்து தகவல்
மேலும் தடைபட்டுள்ள தடைபட்டுள்ள திருச்சி ரயில்வே சந்திப்பு மேம்பாலத்தின் பணிகள் இன்னும் ஆறு மாதத்தில் முடிவடையும். அதன்பின்னர் மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்படும் எனவும் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.