அண்ணாமலை திணிக்கப்பட்ட தலைவர்! முதிர்ச்சி பத்தாது! காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் சாடல்!
திருச்சி: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு அரசியல் முதிர்ச்சி இல்லை என்றும் அவர் திணிக்கப்பட்ட தலைவர் எனவும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் எம்.பி. தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் அண்ணாமலைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இவ்வாறு பேசினார்.
மேலும், ராகுல் காந்தி முன்னெடுக்கும் பாரத் ஜோடோ யாத்ரா நிச்சயம் வெற்றிபெறும் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
ஆயுள் சிறைவாசிகள் விடுதலை! பெருங்கூட்டத்தை திரட்டிய தமிமுன் அன்சாரி! ரிப்போர்ட் கொடுத்த உளவுத்துறை!
ஆலோசனைக் கூட்டம்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் எம்.பி.கலந்துகொண்டு முக்கிய ஆலோசனைகள் சிலவற்றை அதிகாரிகளுக்கு வழங்கினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ராகுல்காந்தியின் நடைபயணத்தை கண்டு பாஜக அஞ்சுவதாக கூறினார்.
பயணம் வெற்றிபெறும்
ராகுல் காந்தி மேற்கொள்ளும் பாரத் ஜோடோ யாத்ரா மிகவும் எழுச்சியுடன் இருப்பதாகவும் நிச்சயம் அந்த பயணம் வெற்றிபெறும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். அரசியல் கட்சித் தலைவரின் செயல்பாடுகளை வைத்து தான் விமர்சிக்க வேண்டுமே தவிர ராகுல் அணியும் ஆடையை வைத்து விமர்சிக்கக் கூடாது எனக் கூறினார். மேலும், ராகுல் காந்தியை கண்டு பாஜக அஞ்சி நடுங்குவதாக திருநாவுக்கரசர் எம்.பி. தெரிவித்துள்ளார்.
திணிக்கப்பட்ட தலைவர்
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு அரசியல் முதிர்ச்சி கிடையாது என்றும் அதனால் தான் அவர் நீட் தேர்வில் வெற்றிபெற்ற மாணவியை காலில் விழ வைத்து தன்னை பெரிய தலைவர் போல் காட்டிக்கொள்ள முயன்றிருக்கிறார் எனத் தெரிவித்தார். அண்ணாமலையை பொறுத்தவரை அவர் திணிக்கப்பட்ட தலைவர் என திருநாவுக்கரசர் ஒரே போடாக போட்டார்.
திருநாவுக்கரசர்
நீட் தேர்வு விவகாரத்தை பொறுத்தவரை அரசே இனி வரும் காலங்களில் பயிற்சி மையங்களை தொடங்கி நடத்த வேண்டும் என திருநாவுக்கரசர் எம்.பி. கேட்டுக்கொண்டார். கடந்த சில மாதங்களாக ஆக்டிவ் அரசியலில் இருந்து சற்று ஒதுங்கி இருந்த திருநாவுக்கரசர் ராகுலின் தமிழக வருகைக்கு பிறகு மீண்டும் பரபரப்பாக தனது திருச்சி மக்களவை தொகுதிக்குள் உலா வருகிறார்.