திமுக நிர்வாகி மடிப்பாக்கம் செல்வம் கொலை - சமயபுரத்தில் 2 பேர் கைது
சென்னை மடிப்பாக்கத்தில் திமுக வட்ட செயலாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருச்சி: சென்னை மடிப்பாக்கம் திமுக நிர்வாகி செல்வம் கொலை வழக்கில் இருவரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னையில் இருந்து காரில் தப்பிச்சென்ற போது சமயபுரம் டோல் கேட் அருகே இருவரை கைது செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
வெட்டி கொல்லப்பட்ட மடிப்பாக்கம் செல்வம் சென்னை மடிப்பாக்கம் 188 வது தி.மு.க வட்ட செயலாளர் பதவியில் இருந்தார். இவருடைய அலுவலகம் ராஜாஜி நகரில் உள்ளது. இவர் மாநகராட்சி தேர்தலில் தி.மு.க சார்பில் 188-வது வட்ட வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவற்கு திமுக சார்பில் விருப்பமனு அளித்தார்.

செவ்வாய்கிழமையன்று இரவு 9 மணிக்கு அவரது அலுவலகம் உள்ள ராஜாஜி தெருவில் இருந்து சுமார் 10 மீட்டர் அருகில் உள்ள ராமச்சந்திரா தெருவில் நின்று பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது 3 இரு சக்கர வாகனத்தில் வந்த 4 பேர் முதல் 6 பேர் கொண்ட கும்பல் செல்வத்தை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்றுள்ளனர். தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் நடைபெற்ற கொலை என்பதால் தேர்தலுக்கான கொலையா? இல்லை தொழில் ரீதியான கொலையா? என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டறிய 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சென்னை கமிஷனரின் தனிப்படை, பரங்கிமலை துணை ஆணையர் தனிப்படை, மடிப்பாக்கம் உதவி ஆணையர் தனிப்படை, மடிப்பாக்கம் ஆய்வாளர் தனிப்படை, ஆதம்பாக்கம் ஆய்வாளர் தனிப்படை, பழவந்தாங்கல் குற்றப்பிரிவு ஆய்வாளர் தனிப்படை என 6 தனிப்படையினர் கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து எந்த தடயமும் கிடைக்காத நிலையில் முக்கிய டோல் கேட்களில் கார்களில் வந்தவர்களை விசாரணை நடத்தினர். சமயபுரம் டோல் கேட் அருகே ஒரு காரில் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருவர் செல்வதைப் பார்த்த போலீசார் அவர்களிடம் விசாரித்தனர். இருவருக்கும் மடிப்பாக்கம் செல்வம் கொலையில் தொடர்பிருப்பதை அறிந்த போலீசார் அவர்களை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications