பட்டாசு தீக்காயங்களில் பேனா மையை ஊற்றுவதோ -காப்பி பொடியை அப்புவதோ கூடாது! டாக்டர் சொல்லும் முதலுதவி
திருச்சி: பட்டாசு தீக்காயங்களில் பேனா மையை ஊற்றுவதோ, காப்பி பொடியை அப்புவதோ கூடாது என மருத்துவர்கள் முதலுதவி டிப்ஸ் வழங்குகின்றனர்.
பட்டாசு தீக்காயங்களில் சில்வர் சல்ஃபாடயசின் என்ற களிம்பை முதலில் பூசிவிட்டு கட்டாயம் மருத்துவரை நாடி அவரின் ஆலோசனைப் படி தடுப்பூசி மற்றும் ஆண்டிபயாடிக் மருந்துகளை தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும் எனக் கூறுகிறார்கள். இது தொடர்பாக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியின் முன்னாள் துணை முதல்வர் டாக்டர் அலீம் கூறுவதாவது;

''தீபாவளி கொண்டாட்டத்தின் போது கண்காணிப்பின்றி குழந்தைகளை மத்தாப்பு வெடிக்க அனுமதிக்கக் கூடாது. பட்டாசு மற்றும் மத்தாப்புகளை முடித்த வரையில் காயம் படாமல் கவனமாக வெடிக்க வேண்டும். மத்தாப்பு கங்கினை தெரியாமல் தொடுவதால் அல்லது மத்தாப்பில் இருந்து வரும் சிதறல்கள் படுவதால் ஏற்படும் காயங்கள் தோலில் சிறு கொப்புளங்களை உருவாக்கும். கட்டாயம் அந்த புண்ணில் பேனா மையை ஊற்றுவதோ, காப்பி பொடியை அப்புவதோ, தைலத்தை தடவுவதோ, ஐஸ்கட்டியை வைப்பதோ, ஐஸ் தண்ணீரை ஊற்றுவதோ கூடாது.''
''தீக்காயத்தால், ஏற்பட்ட சிறு கொப்புளங்களைஉடைக்கவும் கூடாது. சாதாரண வெப்பநிலையில் இருக்கும் தண்ணீரை எடுத்து ஐந்து முதல் பத்து நிமிடங்கள் அந்தக் காயம் மீது ஊற்ற வேண்டும். சில்வர் சல்ஃபாடயசின் என்ற களிம்பை வாங்கி அந்தக் காயம் ஏற்பட்ட பகுதியில் தடவ வேண்டும். கட்டாயம் வேறு எண்ணெய்களையோ, மாவு போன்றவற்றையோ அந்தக் காயத்தில் தடவக்கூடாது. அதுகிருமித் தொற்றை ஏற்படுத்தி விடும். ''
''காயத்தை மூடுவதற்கு, புண்ணோடு எளிதில் ஒட்டாத துணியை பயன்படுத்தலாம். துணியால் ஆன பேண்டெய்டுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். இவை முதலுதவி தான், அடுத்ததாக அருகில் இருக்கும் மருத்துவரை அணுக வேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படி தடுப்பூசி மற்றும் ஆண்டிபயாடிக் மருந்துகளை தொடர்ந்து எடுத்துக் கொண்டால் தான் காயம் குணமாகும்.''
''மத்தாப்பு தீப்பொறிகள் கண்களில் விழுந்துவிட்டால் கட்டாயம் கண்களை கசக்கக்கூடாது. இது பாதிப்பை இன்னும் அதிகப்படுத்தும். சாதாரண தண்ணீரில் கண்களை நன்றாக கழுவி, பாதிக்கப்பட்ட நபரை ஆசுவாசப்படுத்தி, ஒன்றுமில்லை என தைரியம் கொடுத்து எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கண் மருத்துவரிடம் செல்ல வேண்டும். கண் மருத்துவரிடம் செல்வதற்கு முன் யாராவது சொல்கிறார்கள் என்றும் சொட்டு மருந்தையோ, வேறு மருந்துகளையோ கண்ணில் விடக்கூடாது.''












Click it and Unblock the Notifications