மறுபடியுமா? பின்னால் இருந்து கிளம்பிய புகை..அலறியடித்து ஓடிய ஓனர்.. அடுத்தடுத்த இ-பைக் பரிதாபங்கள் !
திருச்சி : இ பைக் எனப்படும் எலக்ட்ரிக் வாகனங்கள் தீ பிடித்து வருவது தொடர்கதையாகி வரும் நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மீண்டும் ஒரு எலக்ட்ரிக் வாகனம் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2 நாட்களுக்கு முன்னர் வேலூர் மாவட்டத்தில் நள்ளிரவில் சார்ஜ் ஏறிக் கொண்டிருந்த எலக்ட்ரிக் வாகன பேட்டரியில் இருந்து வெளியேறிய புகையால் தந்தை, மகள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தற்போது மின்சார இருசக்கர வாகனம் மற்றும் கார்களின் பயன்பாடுகளை மத்திய அரசும் மாநில அரசும் ஊக்குவித்து வரும் நிலையில் இதுபோன்ற விபத்துகள் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் சம்பவம்
வேலூர் மட்டுமல்ல இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலும் மின்சார இருசக்கர வாகனங்கள் தீப்பற்றிய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஹரியானா மாநிலம் குருகிராமில் சார்ஜ் போட்டிருந்த மின்சார வாகனம் தீப்பற்றியதில், 60 வயது முதியவர் உயிரிழந்தார். மும்பையின் அந்தேரி, ஹைதராபாத்திலும் கடந்தாண்டு மின் இருசக்கர வாகனங்கள் தீப்பற்றிய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

தீ விபத்துகள்
தமிழகத்திலும் இதுபோன்ற விபத்துகள் சில நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுரை சின்ன சொக்கிக்குளத்தில் கடந்தண்டு டிசம்பர் மாதம் முருகானந்தம் என்பவரது வீட்டில் மின்சார இருசக்கர வாகனம் தீப்பிடித்தது. பல மணி நேரம் சார்ஜ் போட்டதால், இருசக்கர வாகனம் வெடித்து அருகிலிருந்த காரும் தீப்பற்றியது. மதுரை வில்லாபுரத்தில் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின்சார வாகனம் தீப்பற்றி, அருகிலிருந்த மற்ற வாகனங்களும் பற்றி எரிந்த நிகழ்வுகளும் நடந்துள்ளன.

மீண்டும் அதிர்ச்சி
மின்சார வாகனத்தின் பேட்டரி சார்ஜ் ஏற்றப்படும் போது அதிகப்படியான உஷ்ணத்தால் புகை வெளியாகி இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் வேலூர் சம்பவம் நிகழ்ந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் ,திருச்சியில் ஒரு எலக்ட்ரிக் வாகனம் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள படுகைகளம் பகுதியை சேர்ந்த முருகேஷ் ஒகினோவா என்ற நிறுவனத்தின் மின்சார வாகனத்தை பயன்படுத்தி வருகின்றார். இந்நிலையில் அவருக்கு சிங்கப்பூரில் வேலை கிடைத்துள்ளது.

தீயில் எரிந்து சேதம்
இந்நிலையில் முருகேஷ் நேற்று சிங்கப்பூர் செல்வதற்காக தனது மின்சார இரு சக்கர வாகனத்தில் மணப்பாறைக்கு வந்து விட்டு பின்னர் அங்குள்ள ஆஞ்சநேயர் பகுதியில் உள்ள ஒரு கடையில் தனது வாகனத்தை நிறுத்தி விட்டு புறப்பட்டுள்ளார். இன்று காலை சுமார் 10 மணி அளவில் கடைக்காரர் எலக்ட்ரிக் பைக்கை எடுத்து வெளியே வைத்த போது பைக்கின் பேட்டரி பகுதியில் இருந்து புகை கிளம்பியது. இதனால் அவர் அலறி ஓடிய நிலையில் அருகிலிருந்தோர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சித்துள்ளனர். ஆனாலும் இந்த விபத்தில் அந்த வாகனம் முற்றிலும் எரிந்து சேதமானது.












Click it and Unblock the Notifications