மின்சாரம், குடிநீர், நிவாரணம் எதுவும் முழுசா வந்து சேரல... டெல்டாவாசிகள் குமுறல்.. போராட்டம்!
திருச்சி: டெல்டா மாவட்டங்களில் இன்னும் முழுதாக கஜா நிவாரண பணிகள் நடக்கவில்லை என்று டெல்டா மக்கள் வருத்தம் தெரிவித்து இருக்கிறார்கள்.
கடந்த 15-ம் தேதி இரவு தமிழகத்தில் கஜா புயல் கரையைக் கடந்தது. இதில், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் சாய்ந்து விழுந்தன. பல ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின. கஜா புயலில் சிக்கி 10 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கண் முன்னே விவசாயம் நாசமானதை கண்டு, மனம் வெதும்பி விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட சோகம் நிகழ்வுகளும் நடந்தன.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர்கள், தொழில் அதிபர்கள், தன்னார்வலர்கள் என பலர் உதவிகளை வழங்கி வருகிறார்கள். இருப்பினும், இன்னும் பல கிராமங்களுக்கு மின்சாரம், குடிநீர் சென்று சேர்வதில் தாமதம் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

முழு நிவாரணம் கிடைக்கும்
திருச்சி மாவட்டம் லால்குடி, மண்ணச்சநல்லூர் பகுதிகளில் ‘கஜா' புயலால் சாய்ந்த வாழைகளை சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மைத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது, அரசு அறிவித்த இழப்பீட்டு தொகை முறையாக வழங்கப்படும் என்று பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் உறுதி அளித்தனர்.

நொச்சியம் கிராமம்
பின்னர் நொச்சியம் கிராமத்தில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது; திருச்சி மாவட்டத்தில் மட்டும் கஜா புயல் தாக்கத்தால் 9,397 மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. 3,611 வீடுகள் சேதமடைந்துள்ளன. 2,521 ஹெக்டேர் அளவிற்கு வேளாண் பயிர்கள் சேதமடைந்துள்ளன. வாழை மட்டும் 1,648 ஹெக்டேர் அளவுக்கு சேதம் அடைந்துள்ளது. மேலும் படிப்படியாக மின்இணைப்புகள் சீரமைக்கப்பட்டு மின்விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.

முழு மின்சாரம்
90 சதவீதம் மின் கம்பங்கள் நடப்பட்டுள்ளன. இன்னும் ஒரு சில தினங்களில் 100 சதவீதம் மின்விநியோகம் முழுமையாக வழங்கப்படும். சாய்ந்த மின்கம்பங்கள் அனைத்தும் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. இந்த விவரங்கள் அனைத்தும் தமிழக முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று முழுமையான நிவாரணம் பெற்றுத் தரப்படும் என்று தெரிவித்தார்.

டெல்டா டெல்லி போராட்டம்
விவசாய விளை பொருட்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட அனைத்து வங்கிகளிலும் விவசாயிகள் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். புயல் பாதிப்பால் சேதம் அடைந்த அனைத்து விவசாய பயிர்களுக்கும் உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் ஒன்றிணைந்து டெல்லியில் நாளை மற்றும் நாளை மறுநாள் போராட்டம் நடத்த உள்ளனர். இதில் பங்கேற்பதற்காக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சியில் இருந்து ஏராளமான விவசாயிகள் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

காலிக்குடங்களுடன் மறியல்
திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சிக்கு உட்பட்ட முத்தன்தெரு பகுதியில், கஜா புயல் பாதிப்புக்கு பின்பு இன்னும் குடிநீர் வினியோகிக்கப்படவில்லை. இதனால், ஆத்திரம் அடைந்த மக்கள் காலை மணப்பாறை பஸ் நிலையம் அருகே காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்து வந்த மணப்பாறை இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடும்படி கூறினர். ஆனால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட மறுத்து விட்டனர். பின்னர் உடனடியாக நகராட்சி அதிகாரிகள் குடிநீர் வழங்குவதற்கான பணியை தொடங்கியதால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துச் சென்றனர்.












Click it and Unblock the Notifications