9300 மரங்கள்.. 40 வீடுகள்.. 1570 மின் கம்பங்கள்.. கஜாவால் பெரும் சேதத்தை சந்தித்த திருச்சி!
திருச்சி மாவட்டத்தில் கஜா புயல் பாதிப்பால் 9,300 மரங்கள், 1,570 மின் கம்பங்கள், 40 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் கஜா புயல் பாதிப்பால் 9,300 மரங்கள், 1,570 மின் கம்பங்கள், 40 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கஜா புயல் வெள்ளிக்கிழமை காலை நாகையில் கரையைக் கடந்த பின்னர், பலத்த சூறை காற்றுடன் மழை பெய்தது. அதன் தாக்கம் திருச்சி மாவட்டப் பகுதிகளிலும் எதிரொலித்தது. மாவட்டத்தில் கஜா புயல் பாதிப்பால் பூலாங்குடி பர்மா காலனி ஆட்டோ ஓட்டுநர் துரைசாமி (74) மீது மரம் விழுந்தும், , மருங்காபுரி வட்டம், மரவப்பட்டியைச் சேர்ந்த அ. சின்னம்மாள் (70) மீது ஓட்டுவீடு சரிந்தும் விழுந்ததால் இருவரும் உயிரிழந்தனர். சின்னம்மாளைக் காப்பாற்ற முயன்ற சித்ரா காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருச்சி மாவட்டத்தில் இதுவரை 40 வீடுகள், 9300 மரங்கள், 1570 மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன. 10 ஆடுகள், 1 காளை, 9 பசுக்கள் உயிரிழந்துள்ளன. மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மனித உயிரிழப்பு மற்றும் கால்நடை உயிரிழப்புகளுக்கு அரசிடமிருந்து நிவாரணம் பெற்றஉத் தரப்படும்.பயிர், வாழை சேதங்கள் குறித்து வேளாண் துறையின் கணக்கெடுத்து வருகின்றனர். இந்த விவரம் கிடைத்தப்பின்னர் அரசுக்கு அனுப்பப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருச்சி, கரூர் மாவட்டத்தில் 10,000 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த 1 லட்சம் வாழைகள் கஜா புயலால் சேதமடைந்துள்ள நிலையில், வேளாண் துறை முதன்மைச் செயலரும், வேளாண் உற்பத்தி ஆணையருமான ககன்தீப்சிங் பேடியிடம் விடுத்த கோரிக்கையின்படி, விரைவில் சிறப்புக்குழு மாவட்டத்தில்ஆய்வு மேற்கொள்ளும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதுபோல, தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் உமாவிடம் வாழைசேதம் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. பாதிப்புகள் குறித்து விஞ்ஞானிகள் அறிக்கை வழங்குவார்கள். அதன் விவரம் வாழை விவசாயிகளுக்குத் தெரிவிக்கப்படும் என்று அறிவித்ததாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் புலியூர் ஏ.நாகராஜன் தெரிவித்துள்ளார்.