மிதந்த மனித கழிவுகள்.. நள்ளிரவில் நீர்த்தேக்க தொட்டியில் ஏறிய இளைஞர்கள்.. கொடூரம்! அதிர்ந்த திருச்சி
திருச்சி: வேங்கைவயல் சம்பவம் மாநிலம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே மீண்டும் அதேபோன்ற ஒரு கொடூரம் திருச்சியில் நடந்துள்ளது. திருச்சி காந்தி மார்க்கெட் அருகே மாநகராட்சி மேல்நிலை தண்ணீர் தொட்டியின் மீது ஏறிய சிலர், மனிதக் கழிவைக் கலந்த சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு இறுதியில் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்தும் நீர்த்தேக்க குடிநீர்த் தொட்டியில் மனித மலம் கலந்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பரபரப்பு:
இந்தச் சம்பவம் மாநிலம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்திய சூழலில், இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. சுமார் இரண்டு ஆண்டு விசாரணைக்குப் பிறகு சமீபத்தில் தான் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். சிபிஐ குற்றப்பத்திரிக்கை குறித்து ஒரு தரப்பினர் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகிறார்கள்.
இந்த அதிர்ச்சி முடிவுக்கு வருவதற்குள் மீண்டும் அதேபோன்ற ஒரு ஷாக் சம்பவம் திருச்சியில் நடந்துள்ளது. அங்குள்ள காந்தி மார்க்கெட் அருகே 20-வது வார்டு வடக்கு தையக்காரத் தெருவில் நீர்த்தேக்க தொட்டி ஒன்று உள்ளது. சுமார் 5000 லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மீது ஏறிய சிலர், ஏதோ மர்ம பொருளை உள்ளே வீசியுள்ளனர்.
மனித கழிவுகள்:
இதை அங்குள்ளவர்கள் கவனித்து என்னவென்று பார்த்துள்ளனர். உள்ளே பாலிதின் பை ஒன்று மிதந்த நிலையில், உள்ளே மனிதக் கழிவு இருப்பது தெரிய வந்தது. உடனடியாக அங்கிருந்தவர்கள் இது தொடர்பாக மாநகராட்சி மற்றும் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள் தண்ணீரில் கிடந்த மனிதக் கழிவை அகற்றிவிட்டு, நீர்த்தேக்க தொட்டியைச் சுத்தப்படுத்தினர். மேலும், அப்பகுதி முழுக்க பிளீச்சிங் பவுடரும் தூவினர்.
திடீரென இரவு நேரத்தில் வந்து தண்ணீர் தொட்டியில் மனித கழிவை வீசி சென்றவர்கள் யார் ? என்பது குறித்து திருச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அதேநேரம் இந்த தொட்டியில் உள்ள தண்ணீர் குடிநீருக்குப் பயன்படுத்தப்படுவது இல்லை என்று சொல்லப்படுகிறது.
கஞ்சா நபர்கள்
முதற்கட்ட விசாரணையில் கஞ்சா போதையில் திரிந்த சில நபர்கள் இந்த கொடூரத்தை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications